59 எம்பி.. Delimitation நமக்கு லாபம் தானா? தொகுதி மறுவரையறை எப்போது வரும்? கூலாய் சொன்ன அமித் ஷா!
சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், தென் மாநிலங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில் தொகுதி மறுவரையறை எப்போது முதல் அமலுக்கு வரும்? என்ற தகவலையும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து தென் மாநிலங்களில் அதிக கவலை நிலவி வருகிறது.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள், புதிய தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வந்தால் தங்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற அச்சத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.
அமித் ஷா
இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. இந்த சூழலில் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அமித் ஷா, தென் மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரியாக பின்பற்றியதற்காக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை மாற்றப்படும்போது, அந்த மாநிலங்களின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மறுவரையறை
குறிப்பாக," தமிழ்நாட்டில் தேர்தல் காலத்தை முன்னிட்டு இந்த மசோதா கொண்டு வரப்படுவது குறித்து சிலர் அச்சம் தெரிவித்து வருவது தேவையற்றது. தொகுதி மறுவரையறை உடனடியாக அமலுக்கு வரும் ஒன்றல்ல. அதற்கு பல கட்ட நடவடிக்கைகள் அவசியம். முதலில் தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் ஆய்வு மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்படும். அதன் பின்னர் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்குப் பிறகு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தால்தான் அது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்" என்று கூறியுள்ளார்.
2029ஆம் ஆண்டு
இதனால், 2029ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதுவரை நடைபெறும் அனைத்து தேர்தல்களும் தற்போதைய தொகுதி எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் உடனடி மாற்றங்கள் ஏற்படும் என்ற அச்சத்திற்கு இடமில்லை என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு
தொகுதி மறுவரையறை தொடர்பாக எழுந்துள்ள அரசியல் மற்றும் பொதுமக்கள் அச்சங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு விளக்கமளித்து வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற உறுதியான விளக்கம் வழங்கப்பட்டிருந்தாலும், தமிழகம் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு 59 எம்பி
தொகுதி வரையறை மூலம் 850 தொகுதிகளாக அதிகரிக்கப்படும் போது, தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 20 இடங்களும், கேரளாவிற்கு கூடுதலாக 10 தொகுதிகளும், தெலுங்கானாவிற்கு கூடுதலாக 9 மற்றும் ஆந்திராவிற்கு கூடுதலாக 13 சீட்களும் கிடைக்கும் என்றார். மகாராஷ்டிராவிற்கு கூடுதலாக 24 சீட்கள் கிடைக்கும். தமிழ்நாட்டிற்கு தற்போது 39 இடங்கள் உள்ள நிலையில் தொகுதி மறுவரையைறைக்கு பின்னர் 59 ஆகவும், கேரளாவில் 20 தொகுதிகளானது தற்போது உள்ளது 30 தொகுதிகளாகவும், ஆந்திராவில் 25 தொகுதிகள் 38 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications