தமிழ்நாட்டிற்கு வந்து இறங்குவதற்கு முன்பாகவே தமிழில் ட்வீட் செய்து திமுக அரசை சீண்டிய அமித் ஷா
சென்னை: தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். இன்று தமிழகம் வரும் நிலையில் தமிழில் பதிவிட்டுள்ளார் அமித் ஷா.
தமிழகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று அமித்ஷா திருச்சி வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமானிலிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வருகிறார். அவர் புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசாரப் பயண நிறைவு விழாவில் பங்கேற்கிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பின்னர் சாலை வழியாக திருச்சிக்கு வரும் அவர், ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம், தமிழக அரசியலின் தற்போதைய நிலை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், நாளை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து, மன்னார்புரத்தில் நடைபெறும் 'மோடி பொங்கல் விழா'- வில் பங்கேற்கிறார். இதையடுத்து பகல் 1:20 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து புதுடெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமித்ஷாவின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தப் பயணம் குறித்து சமூக வலைதளத்தில் தமிழில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
பல லட்சக்கணக்கான மக்களை இந்தப் பேரணி இணைக்கிறது. இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழகத்தின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் உரையாற்றுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications