மருத்துவம், பொறியியல் கல்வி தமிழில் இல்லையா? அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு grok சொன்ன பதிலை பாருங்க
சென்னை: மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வராததால் திமுக அரசு தமிழர்களுக்கு எதிரானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ x தளத்தில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், அமித்ஷாவின் கருத்து உண்மைக்கு முரண்பட்டிருப்பதாக Grok கூறியுள்ளது.
டைம்ஸ் செய்தி ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அமித்ஷா, தமிழக அரசை தமிழ் விரோத அரசு என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் பேசியதாவது, "தமிழக அரசு மருத்துவம், பொறியியல் படிப்பை தமிழில் தொடங்கவில்லை. இதற்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பு கூட செய்யவில்லை. எனவே இது தமிழ் விரோத அரசாக இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும். தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு ஊழலில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக தொழில்கள் மாநிலத்திலிருந்து வெளியேறியுள்ளன. இளைஞர்களும் வேறு மாநிலத்திற்கு சென்றிருக்கின்றனர்.
ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் மிகவும் முற்போக்கான மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. இன்று திமுக அரசின் கொள்கைகளால் மிகவும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நான் மேற்கொண்ட பயணத்தில், மக்கள் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற ரெடியாக இருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
இவர் பேசிய வீடியோ x தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த வீடியோவை x தளத்தின் உண்மை சரிபார்ப்பு AI கருவியான grok- இடம் பகிர்ந்து, அமித்ஷாவின் கருத்து உண்மையா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதில் ஒரு பயனர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த grok,
"தமிழ்நாடு ஏற்கனவே பொறியியல் கல்வியை தமிழில் வழங்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், மருத்துவக் கல்வியை தமிழில் வழங்குவதற்கான அனுமதியையும் தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. இது தொடர்பாக "தி இந்து" பத்திரிகையில் வெளியான செய்தி, அமித் ஷாவின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் உள்ளது" என்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் தெரிவித்திருக்கிறது.
The DMK govt is anti-Tamil because it has not introduced medical and engineering education in Tamil.
— Amit Shah (@AmitShah) March 28, 2025
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வராததால் திமுக அரசு தமிழர்களுக்கு எதிரானது. pic.twitter.com/LgLKF5su29
இந்த பதில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக கல்வி விஷயத்தில், மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த வழி வகுக்கும் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால்தான் மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க முடியும் என்று கூறி வருகிறது. ஆனால் தமிழக அரசு இரு மொழிக்கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.
இந்த பஞ்சாயத்துக்கு இடையில், தமிழக அரசு மீது அமித்ஷா வைத்த குற்றச்சாட்டு வேகமாக பரவிய நிலையில், அதனை மறுத்த grok அளித்த பதிலும் பரவலாக ஷேராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications