சொல்ல முடியாத அரசியல் என்ன? புதிர் போட்ட ரஜினி.. கோவைக்கு பறக்கும் அமித் ஷா.. திடீரென எழுந்த கேள்வி!
சென்னை: தமிழ்நாட்டிற்கு பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா வர உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ரவியுடன் சந்திப்பு நடத்தி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த ஆன்மீக விழா ஒன்றில் மிகவும் உருக்கமாக பேசி இருந்தார். பல கோடி சொத்துக்களை சேர்த்தவர்கள் கூட சந்தோசமாக இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.
அவரின் பேச்சை கேட்ட பலர் கண்டிப்பாக அவர் ஆன்மீக பாதையில்தான் செல்வார் என்றே எதிர்பார்த்து இருப்பார்கள். ஆனால் ஆன்மீகம் பற்றி பேசிய ஒரே மாதத்திற்குள் ஆளுநர் ஆர். என் ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
அதோடு இந்த சந்திப்பில் அரசியல் பேசியதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதான் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அது சரி.. ஸ்டாலினை அரசியல் ரீதியாக ரஜினி எப்படி எதிர்கொள்வார்? செஸ் ஒலிம்பியாட்ல பார்த்தீங்கல்ல?
அமித் ஷா
இந்த சந்திப்பு நடந்திருக்கும் நேரம்தான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சரியாக அதிமுகவில் தலைமை மோதல் நிலவி வரும் நிலையில் ரஜினிகாந்தின் இந்த சந்திப்பு நடந்து உள்ளது. அதிமுக - பாஜக இடையில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக எடப்பாடி - பாஜக இடையே சிறிய பிளவு ஏற்பட்டது போன்ற பிம்பம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி, அண்ணாமலை என்று திமுகவிற்கு எதிரான தலைகள் எல்லாம் தனி தனியாக கூட்டணி இன்றின் சிதறிக்கிடக்கிறார்கள். திமுகவிற்கு எதிர் தரப்பில் வலுவான தலைவர் இல்லையோ என்று எண்ணும் அளவிற்கு சூழ்நிலை காணப்படுகிறது.
சந்திப்பு
இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி - ரஜினிகாந்த் இடையிலான சந்திப்பு நடந்துள்ளது. ரஜினியை முன்னிறுத்தி அரசியல் திட்டங்கள் எதுவும் போடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு சரியாக அமித் ஷா தமிழ்நாடு வர உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மாதம் 29ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் கோவைக்கு வர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
காரணம் என்ன?
பாஜக அலுவலகங்களை அவர் திறக்க வருவதாக சொல்லப்படுகிறது. திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் கோவை அலுவலகத்தை அவர் நேரில் திறக்க உள்ளார். மீதம் உள்ள அலுவலகங்களை கோவையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க இருக்கிறார். இது போக பாஜக தலைவர்களை சந்தித்து கோவையில் பேசவும் அமித் ஷா முடிவு செய்துள்ளார்.
வேறு என்ன காரணம்
இந்த சந்திப்பில் அதிமுக மோதல் குறித்தும், தமிழ்நாடு அமைச்சர்கள் மீது உள்ள சில புகார்கள் குறித்தும், 2024 தேர்தல், லோக்சபா தேர்தல் கூட்டணி உள்ளிட்ட சில விஷயங்கள் பற்றியும் அமித் ஷா ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் திடீரென ஆளுநர் ரவியுடன் சந்திப்பு நடத்தி உள்ளார். கோவை வரும் அமித் ஷா.. ரஜினிகாந்துடன் சந்திப்பு நடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இன்று ஆளுனருடன் அரசியல் பேசியதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
அந்த கேள்வி?
நாங்கள் பேசிய அரசியல் பற்றி உங்களிடம் சொல்ல முடியாது என்றும் ரஜினி புதிர் போட்டுள்ளார். இந்த நிலையில்தான் கோவை வரும் அமித் ஷாவை ரஜினிகாந்த் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நடக்க போவதாக சில பாஜக தலைகள் கூறி வரும் நிலையில்தான் அமித் ஷா வருகை - ரஜினி சந்திப்பு எல்லாம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி இந்த முறையாவது அரசியலில் காலெடுத்து வைப்பாரா.. இல்லை கடந்த முறை போல அஸ் ஐயம் சஃபரிங் ஃபர்ம் ஃபீவர் என்று ஒதுங்கிக்கொள்வாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.