காலி "கிப்ட் பாக்ஸை" கொடுத்த ஊடகங்கள்.. எக்சிஸ்ட் போல் முடிவால் அமமுகவினர் அதிர்ச்சி!
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான ஊடகங்கள் டிடிவி தினகரனின் அமமுக ஒரு இடங்களில் கூட வெல்ல வாய்ப்பு இல்லை என்றே சொல்லி இருப்பது அந்த கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடந்தது.
இதில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் ஓரணியாக போட்டியிட்டன.
தமிழகத்தில் திமுக 31 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றும்.. டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பில் தகவல்!
திமுக காங் கூட்டணி
இதேபோல் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், ஐஜேகே, முஸ்லீம் லீக் கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்டவை ஓரணியாகவும் போட்டியிட்டன.
தனித்து களம்
அதேநேரம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்து கிப்ட் பாக்ஸ் சின்னத்தில் களம் இறங்கியது. தேர்தல் சின்னமான கிப்ட் பாக்ஸ் வேட்பு மனு தாக்கல் முடிந்தபின்னரே கிடைத்த போதிலும் அதனை அமமுகவினர் தீவிரமாக முயற்சி செய்துவிளம்பரம் செய்தனர்.
திமுக உடன் கூட்டு
அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து டிடிவி தினகரன் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். அதேநேரம் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அதிமுக தலைவர்கள் திமுகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்திருப்பதாக பிரச்சாரம் செய்தனர்.
அதிமுகவுக்கு வாய்ப்பில்லை
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெல்லும் என பெரும்பாலான தேசிய மற்றும் மாநில ஊடகங்கள் சொல்லியிருக்கின்றன. அதிமுகவுக்கு ஒரு சில இடங்களே கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லி உள்ளன.
அமமுவுக்கு ஒன்றும் இல்லை
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி கிப்ட் பாக்ஸ் சின்னத்தில் போட்டியிட்ட அமமுகவுக்கு காலி கிப்ட் பாக்ஸை மக்கள் பரிசளித்திருப்பதாகவும் அமமுகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் பெரும்பலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அமமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் இதெல்லாம் கணிப்புதான்.. 23ம் தேதி தெரியும் எங்களோட பலம் என்றும் அமமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.