சசிகலா நாளை மறுநாள் சென்னை வருகை- வரவேற்பு, பேரணி நடத்த அனுமதி கோரிய அமமுக மனு நிராகரிப்பு
சென்னை: சசிகலா நாளை மறுநாள் சென்னை வருகை தருவதை முன்னிட்டு 12 இடங்களில் வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கோரி அமமுக நிர்வாகி செந்தமிழன் அளித்த மனுவை சென்னை போலீசார் நிராகரித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தார் சசிகலா. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அங்கு பண்ணை வீடு ஒன்றில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

சென்னைக்கு நாளை மறுநாள் வருகை தருகிறார் சசிகலா. இதனையடுத்து பெங்களூரு முதல் சென்னை வரை சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த அமுமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சென்னையிலும் இதேபோல் சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அமமுகவினர் திட்டமிட்டுள்ளனர். சசிகலா செல்லக் கூடும் என கருதப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை பராமரிப்பு காரணங்களுக்காக அரசு மூடியுள்ளது.
இதனால் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா செல்வார் எனவும் கூறப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உள்ளே சசிகலா செல்லாவிட்டாலும் வெளியே உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கோரி சென்னை போலீசில் அமமுக நிர்வாகி செந்தமிழன் மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அமமுக நிர்வாகி செந்தமிழன் மனுவை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications