கொரோனாவால் அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் (வயது 60) சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த வெற்றிவேல் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸில் தீவிரமாக பணியாற்றினார். சென்னை மாநகராட்சி தமாகா கவுன்சிலராக, தமாகா குழு தலைவராக இருந்தார். பின்னர் மூப்பனார் மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தார் வெற்றிவேல்.

ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ
2011-ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அப்போது சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் ஶ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ஜெயலலிதா இழந்தார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் தேர்தல் போட்டியிட ஏதுவாக தமது ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் வெற்றிவேல். அப்போது ஆர்.கே.நகரில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.
2016 சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.வானார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பிளவுபட்ட போது சசிகலா, தினகரன் அணியில் இருந்தார். சசிகலா, தினகரனின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார் வெற்றிவேல்.

18 எம்.எல்.ஏக்களில் ஒருவர்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் வெற்றிவேலும் ஒருவர். பின்னர் கடந்த ஆண்டு பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வெற்றிவேல் 6,281 வாக்குகள் மட்டும் பெற்றார்.

அமமுகவின் பொருளாளர்
தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அதன் பொருளாளராக நியமிக்கப்பட்டார் வெற்றிவேல். கடந்த 2 வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் வெற்றிவேல் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்து வந்தது.












Click it and Unblock the Notifications