மநீமவை விட கெத்து காட்டிய அமமுக.. இரண்டு பேரும் சேர்ந்து செய்த தரமான சம்பவம்
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்தது என்றாலும், மக்கள் நீதி மய்யத்தைவிடவும் அதிக வாக்குகள் மற்றும் வாக்கு சதவீதம் பெற்று கெத்து காட்டி உள்ளது.
தென்மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை பாதித்துள்ளது அமமுக. தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்ற கட்சிகள் வரிசையில் அமமுக 7வது இடத்தை பிடித்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 10 லட்சத்து 65 ஆயிரத்து 142 வாக்குகள் கிடைத்துள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யத்திற்கு 10லட்சத்து 58 ஆயிரத்து 847 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

அமமுக முன்னிலை
வாக்கு சதவீதம் என்று பார்த்தால் மநீமவைவிட அமமுகவிற்கு முன்பாக உள்ளது. அமமுகவிற்கு 2.47 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு 2.45 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. இரண்டு கட்சிகளுமே நாடாளுமன்ற தேர்தலில் இதைவிடவும் மிக அதிக வாக்குகள் வாங்கி இருந்தன. அமமுகவிற்கு நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டால் பெரிய அடியாகும். மக்கள் நீதி மய்யமும் கடந்த நாடாளுமன்ற தேர்தலைவிட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

காலி செய்த மநீம
அமமுகவும் சரி, மநீமவும் சரி இரண்டுமே திமுக மற்றும் அதிமுகவின் வெற்றியை பல தொகுதிகளில் காலி செய்துள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், வால்பாறை என 10 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றியை காலி செய்துள்ளது மநீம.

காலி செய்த அமமுக
அமமுகவை பொறுத்தவரை காரைக்குடி, திருவாடனை, மேலூர், மதுரை மேற்கு, ஆண்டிபட்டி, பெரியகுளம், மணப்பாறை, மயிலாடுதுறை, ராஜபாளையம், சாத்தூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட அமமுக கூட்டணி அதிமுகவின் வெற்றியை காலி செய்துள்ளது. இதபோல் திருமங்கலம், உசிலம்பட்டி உள்பட சில தொகுதிகளில் திமுகவின் வெற்றியை அமமுக காலி செய்துள்ளது. இந்த தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் அமமுக வாங்கிய வாக்குகளை விட குறைவாகும்.

முழு வளர்ச்சி இல்லை
மக்கள் நீதி மய்யமும் சரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் சரி சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். இரண்டுமே இந்த முறை மிகப்பெரிய அளவில் வாக்கு வங்கியை இழந்துள்ளனர். பல தொகுதிகளில் இவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வாக்கு சதவீதத்தில் அடுத்தடுத்த இடத்தை பிடித்ததை தவிர பெரிய இடத்தை இவர்கள் பிடிக்கவில்லை. அமமுக தென்மாவட்டங்களிலும் சில தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் கொங்கு மண்டலத்திலும் மட்டுமே செல்வாக்கை பெற்றுள்ளன. எல்லா பகுதியிலும் பரவலான வளர்ச்சியை நோக்கி இரு கட்சிகளுமே பயணிப்பதே அடுத்த தேர்தலில் வலிமையான இயக்கமாக மாற உதவும்.












Click it and Unblock the Notifications