அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருக்கு.. வடசென்னை மக்களே அச்சம் வேண்டாம்.. சுங்கத் துறை அதிகாரிகள்
சென்னை: சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாகவே உள்ளது என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Recommended Video
லெபனானில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது நேற்று முன் தினம் வெடித்து சிதறியதில் 100 பேர் பலியாகிவிட்டனர்.
4000 பேர் காயமடைந்தனர். 2 லட்சம் பேர் வீடுகளை இழந்துவிட்டனர். இந்த நிலையில் சென்னை துறைமுகத்திலும் அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம் வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

துறைமுகம்
இதையடுத்து சென்னை மணலியில் துறைமுகத்திற்கு சொந்தமான வேதிப்பொருள் கிடங்கில் சுங்கத் துறை அதிகாரிகள், வேதிப்பொருள் துறை அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் சென்னையில் மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருக்கிறது.

லெபனான்
லெபனான் போல் சென்னையில் வெடிவிபத்து நடக்காது. லெபனானில் பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனம் வெடித்து சிதறியது போல் சென்னையில் ஏற்படும் என அச்சம் வேண்டாம். இந்த கிடங்கு குடியிருப்பிற்கு வெகு தொலைவில் இருக்கிறது. எனவே சென்னை மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்.

கரூர் அம்மன் கெமிக்கல்
இந்த ரசாயனத்தின் மதிப்பு ரூ 1.80 கோடியாகும். ஏற்கெனவே சில டன் அம்மோனியம் நைட்ரேட்டுகள் கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் பாழாகிவிட்டன. மிதமுள்ள அம்மோனியம் நைட்ரேட் ஈ ஆக்ஷன் முறையில் ஏலத்திற்கு விடப்படும். என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு கொரியாவில் வாங்கி சென்னையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த அம்மோனியம் நைட்ரேட் கரூர் அம்மன் கெமிக்கல் நிறுவனத்திற்கு சொந்தமானது.

இறக்குமதி
இந்த நிறுவனம் அனுமதியின்றி இந்த வேதிப்பொருளை இறக்குமதி செய்ததால் இதை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வேதிப்பொருளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கரூர் மெமிக்கல் நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த அம்மோனியம் நைட்ரேட்டை ஒப்படைக்க முடியாது என கூறியது.

ஏலமிட உத்தரவு
மேலும் அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விட உத்தரவிட்டது. ஆனால் 2019-ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவி வருவதால் இந்த ஏலம் விடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இணையம் மூலம் ஏலம் விட முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications