கோயம்புத்தூர் போனால் காரமடைக்கு காரை திருப்புங்க.. வனத்துறை தந்த இன்ப அதிர்ச்சி
கோவை: கோவை, மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பலருக்கும் பிடித்த சுற்றுலா என்றால் பரளிக்காடு சூழல் சுற்றுலா ஆகும். பரளிக்காடு செல்ல பலரும் விரும்புகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் பயணிக்கும் இந்த சுற்றுலாவிற்கு இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து கிளை பிரியும் தோலாம்பாளையம் சாலையில் சென்றால் சுமார் 30 கிலோமீட்டர் பசுஞ்சாலைப் பயணத்திற்குப் பின் பில்லூர் அணைக்கட்டைச் சென்றடையலாம். குறுகலான மலைப்பாதையில் பயணித்தால் அணைக்கட்டை ஒட்டி இருக்கும் பரளிக்காடு எனும் மலையோர கிராமத்தை சென்றடையலாம்.
இங்கு வாழும் பழங்குடியினர் நலனுக்காக வனத்துறையே வடிவமைத்தது தான் பரளிக்காடு பசுமைச் சுற்றுலா. பரளிக்காடு சூழல் சுற்றுலா மூலம் பரளிக்காடு, பூச்சமரத்தூர், பிள்ளூர், நீராடி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் இருந்தும் பரிசல் ஓட்டுபவர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் என ஏராளமான பழங்குடியின மக்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

இங்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்க https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும்.
தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் ஊட்டி, வால்பாறை மற்றும் நீர்நிலைகளை நாடி செல்கின்றனர். இதனால் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை தினந்தோறும் இயங்கும் என்று காரமடை வனத்துறையினர் அறிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து கோவை வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதாலும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று பரளிக்காடு சூழல் சுற்றுலாவை இந்த மாதம் முழுவதும் நடத்த கோவை மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு வருகை தரலாம். 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ரூ.600 எனவும், 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.700 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.














Click it and Unblock the Notifications