மாணவிகளிடம் அத்துமீறல்.. 4 முறை ட்ரான்ஸ்பர்! 15வது நாளே மீண்டும் அட்டூழியம்! சிக்கிய ஹெட் மாஸ்டர்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே நான்கு பள்ளிகளில் பணியாற்றிய அவர் இதே புகாரில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தப் பள்ளிக்கு வந்த 15 நாட்களில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பாரத் அம்பேத்கர் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு குடிபோதையில் தலைமை ஆசிரியர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அதே பள்ளியில் படிக்கும் 5 ஆம் வகுப்பு மாணவியை தன் மடியில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி கிராம மக்கள் வீடியோ காட்சி பதிவு செய்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கல்வி அலுவலகத்திற்குப் புகார் அனுப்பி உள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியர்
புகாரின் பேரில் மாதனூர் வட்டார கல்வி அலுவலர்கள் பீட்டர் மற்றும் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பொதுமக்கள் சிலர் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்தனர். இதனை அறிந்த வட்டார கல்வி அலுவலர்கள் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பொதுமக்கள் தங்களுடைய செல்போன்களில் பதிவு செய்திருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அழித்ததாகக் கூறப்படுகிறது.
பாலியல் தொல்லை
மேலும் ஏற்கனவே பேரணாம்பட்டு ஒன்றியம் அரவட்லா, மாதனூர் ஒன்றியம் காட்டு வெங்கடாபுரம், சம்பந்திகுப்பம் அடுத்த பள்ளவல்லி, ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பணிபுரிந்த பாரத் அம்பேத்கர் இதே போன்ற தவறு செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மீண்டும் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
பணியிடை நீக்கம்
இந்நிலையில் மேல் சானாங்குப்பம் பகுதியில் 5 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தலைமை ஆசிரியர் பரத் அம்பேத்கர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போக்சோ
ஆம்பூர் அருகே தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு மாணவியிடம் தலைமை ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பணியாற்றும் பள்ளிகளில் எல்லாம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பரத் அம்பேத்கரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications