பிரமாண்ட பார்க்கிங், ஓய்வறை.. வேற லெவலில் மாறப்போகும் திருச்செந்தூர் ரயில் நிலையம்
சென்னை: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் பல்வேறு ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ரயில் நிலையமும் மேம்படுத்தப்படுகிறது. இதற்காக ரயில்வே ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி பிரமாண்டமாக, அலங்கார வளைவுடன் உருவாகிறது. இதேபோல் பார்க்கிங் பகுதி, கூடுதல் அறைகளும் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வருகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். கடற்கரையில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தமிழகம் முழுக்க இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

திருச்செந்தூர் ரயில் நிலையம்
குறிப்பாக தைப்பூசம், மாசி திருவிழா, கந்தசஷ்டி போன்ற விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும். இதேபோன்று குலசை முத்தாரம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. மைசூருக்கு அடுத்த படியாக தசரா விழா வெகு விமரிசையாக குலசையில் தான் கொண்டாடப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேடமணிந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
பெரும்பாலும் பக்தர்கள் பலரும் ரயில் சேவையினையே பயன்படுத்தி வருகிறார்கள். திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு வந்து தான் கோவிலுக்கு செல்கிறார்கள். 100 ஆண்டுகள் பழமையான திருச்செந்தூர் ரயில் நிலையத்தினை ரயில்வே புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. ரயில்வேயின் இரண்டாம் ரேங்கில் இருக்கும் ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
ரூ.41 கோடி ஒதுக்கீடு
அந்த வகையில் திருச்செந்தூர் ரயில் நிலையமும் மேம்படுத்தப்படுகிறது. பிரமாண்ட கார் பார்க்கிங், முகப்பு பகுதி நுழைவு வாயில் அமைத்தல், பயணிகள் ஓய்வெடுக்க அறை, கூடுதல் கட்டிடம் என மொத்தம் ரூ.41 கோடி மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முகப்பு பகுதி பிரமாண்டமாக, அலங்கார வளைவுடனும், முதலாவது பிளாட்பாரத்தின் தெற்கு பகுதியில் கூடுதல் கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது.
ரயில் நிலையத்தின் நுழைவு வாசலின் வடக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஸ்டாண்டும், தெற்கு பகுதியில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதியும் அமைக்க மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோன்று நடைமேடை விரிவாக்கம், பயணிகள் ஓய்வறை, காத்திருக்கும் அறை போன்ற உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படுகிறது.
பயணிகள் கோரிக்கை
தற்போதைய காலத்திற்கு ஏற்ப பயணிகளுக்கு தேவையான பல்வேறு நவீன வசதிகளும் உருவாக்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்து முடியும் போது, திருச்செந்தூர் ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும். தற்போது திருச்செந்துர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும், பாலக்காடுக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகிறது. நெல்லை - மணியாச்சி இடையே இருமார்க்கத்திலும் பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் ரயில் சேவைகளை அதிகரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications