உச்சநீதிமன்ற தீர்ப்பால்.. நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்வாரா? ஆனந்த் சீனிவாசன் கேள்வி!
சென்னை: நிதித்துறை அமைச்சர் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பொறுப்பேற்று ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.
ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

அது மட்டுமல்ல, இந்தச் சட்டத் திருத்தமே அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. அது குறித்து பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இந்தச் சட்டத்திருத்தத்தைச் செய்ததே நிதியமைச்சகம் தான். ஆகவே, அதற்குப் பொறுப்பேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனந்த சீனிவாசன், "இந்தத் தீர்ப்பு மூலம் உச்சநீதிமன்றம் இந்தத் திட்டத்தை வெறும் சட்டவிரோதம் என்று சொல்லிவிட்டது என எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு முன்னால் ஒரு சட்டத்தை பாஜக திருத்தி உள்ளது.

நஷ்டமாகும் நிறுவனங்கள் கூட இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி தரலாம் என்று ஒரு வழியை ஏற்படுத்தித் தந்துள்ளது. அதற்காக ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
அது மட்டுமல்ல, 7.5% சதவீதத்திற்கு மேல் பணத்தை நிறுவனங்கள் நன்கொடையாகக் கொடுக்கக் கூடாது என்று ஒரு சட்டம் உள்ளது. அதை பாஜக எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று சட்டத்தையே மாற்றியது.
இதில் நீதிமன்றம் என்ன சொல்லி உள்ளது என்றால், எந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் நன்கொடை அளிக்கப்படுகிறதோ அந்தச் சட்டமே தவறு என்று கூறியுள்ளது. அதற்கு அப்புறம் உச்சநீதிமன்றம் என்ன சொல்லி உள்ளது என்றால், அரசியல் சாசனம் 19/1படி தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சிக்கு யார் எல்லாம் நன்கொடை கொடுத்துள்ளார்கள் எனத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நீங்கள் தகவல் கேட்டுப் பெற முடியும்.
ஆனால், இந்தப் பத்திரங்கள் மூலம் பெறப்படும் நன்கொடை பற்றி யாரும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அது ரகசியமாக உள்ளது. அதில் வெளிப்படைத் தன்மை இல்லை.
அதையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இது சட்டப்படி தவறு என்றும் கூறியுள்ளது. மேலும் எஸ்பிஐ இனிமேல் தேர்தல் பத்திரங்களை விற்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

கூடவே இதுவரை நன்கொடை அளித்த நிறுவனங்கள் பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கச் சொல்லி இருக்கிறது. நஷ்டமான கம்பெனி கொடுத்த நன்கொடை எவ்வளவு? லாபமாக நடக்கும் நிறுவனங்கள் கொடுத்த நன்கொடை எவ்வளவு? எந்தக் கட்சி அதிகம் நன்கொடை பெற்றுள்ளது? எனச் சகல தரவுகளைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு ஒரு வரலாற்றுத் தீர்ப்பு என்று ஏன் சொல்கிறோம் என்றால், 5 நீதிபதிகளும் ஒத்த கருத்துடன் தீர்ப்பை வழங்கி உள்ளனர். ஒருவருக்கு கூட மாற்றுக்கருத்து இல்லை என்பது மிகமிக முக்கியம்.
இந்தத் தீர்ப்பு நிதியமைச்சகத்தின் மீது விழுந்த பெரிய அடி. இந்தத் தீர்ப்பை ஏற்று நிதியமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அதைவிட்டால் வேறு வழியே இல்லை.

ஏனென்றால், பாஜக அரசு செய்த அத்தனை சட்டத் திருத்தங்களையும் உச்சநீதிமன்ற அமர்வு தவறு எனக் கூறிவிட்டது. ஒன்றைக்கூட ஏற்கவில்லை.
நீதிமன்றம் வெறும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறும் திட்டத்தை மட்டும் சட்டவிரோதம் என்று சொல்லவில்லை. இவர்கள் வருமானவரிச் சட்டத்தைத் திருத்தியதைக் கூட சட்டவிரோதம் என்று கூறியுள்ளது.
நீதிமன்றம் பல விசயங்களை உடைத்துள்ளது. பாஜக அரசில் ஒப்பந்தங்கள் பெற்றவர்கள் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளார்கள் என்ற விவரத்தை நீதிமன்றம் கேட்டுள்ளது. அதுவே மிகமிக முக்கியமான பாயிண்ட்.

அப்படி அளிக்கப்பட்டால், ஒருவர் ஒப்பந்தம் எடுப்பதற்கு முன் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்? அரசு ஒப்பந்தம் ஒதுக்கிய பிறகான ஆண்டுகளில் எவ்வளவு நன்கொடை கொடுத்துள்ளார் என்று ஒப்பிட்டுப் பார்த்தாலே மிகப்பெரிய ஊழல் தெரிய வந்துவிடுமே?
யாருக்கு பாஜக அரசு சாதகமாகச் செயல்பட்டுள்ளது என்பது வெளிச்சமாகி விடுமே? அதுவே அரசுக்குப் பெரிய செக் இல்லையா?
நஷ்டத்தில் உள்ள கம்பெனி நன்கொடை தரலாம் என்று சட்டத்தைத் திருத்தினார்கள். எப்படிச் சார் நஷ்டமான கம்பெனி நன்கொடை அளிக்க முடியும்? லாபம் உள்ள நிறுவனம் தானே நன்கொடை வழங்க முடியும்? அங்கேயே சந்தேகம் வரவில்லையா?" என்கிறார்












Click it and Unblock the Notifications