நிர்மலா சொன்ன வரிவசூல் கணக்கு; ஆனந்த் சீனிவாசன் சொன்ன வாழைப்பழ காமெடி !
சென்னை: மத்திய நிதியமைச்சருக்கு நிர்மலா சொல்லி இருக்கும் கணக்கு தப்பு என்றும் அது கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ காமெடி போல் இருக்கிறது என்றும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து வசூல் செய்கின்ற ஜிஎஸ்டி வரித் தொகையைவிடக் குறைவான நிதியையே வழங்கி வருவதாக நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் ராஜன் இருந்த காலத்திலிருந்து திமுக குற்றஞ்சாட்டி வருகிறது.

அவருக்குப் பின்பாக வந்த தங்கம் தென்னரசுகூட இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக வெள்ள நிவாரண விவகாரத்தில் மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
அதற்கான ஆதாரங்களைக் கூட முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துக்காட்டிப் பேசி இருந்தார்.
இதனிடையே திருச்சி விமானநிலையத்தைத் திறந்துவைப்பதற்காகத் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, இதே நிதி விவகாரத்தைக் கையில் எடுத்துப் பேசினார்.

அவர், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத நிதியை ஒதுக்கி வருகிறோம். 2014 ஆம் ஆண்டுக்கு முன் மத்திய அரசு ரூ.30 லட்சம் கோடியைத் தமிழ்நாட்டிற்கு அளித்திருக்கிறது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் பாஜக அரசு ரூ.120 லட்சம் கோடியை வழங்கியுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கு முன் தமிழ்நாடு பெற்றிருந்த நிதியை விட, கடந்த 10 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு கூடுதல் நிதி நாங்கள் வழங்கியுள்ளோம். தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கும் மட்டும் 3 மடங்கு அதிக நிதியை அளித்துள்ளோம்.

ஏழைகள் இலவசமாக நியாய விலை பொருட்களைப் பெறுவதற்காகவும் இலவச மருத்துவச் சிகிச்சைக்கும் பெரிய தொகையை அளித்திருக்கிறோம்" என்று பேசிவிட்டுச் சென்றிருந்தார்.
இந்நிலையில்தான் நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், செலுத்தும் வரியைவிடத் தமிழ்நாட்டிற்குக் கூடுதல் நிதியை அளித்துவருவதாகப் பேசியிருந்தார்.
அதற்கான ஆதாரங்களையும் அவர் அளித்திருந்தார்.
அதாவது, தமிழ்நாட்டிலிருந்து 2014-15 நிதியாண்டு முதல் 2023 மார்ச் வரை வரியாக 6 லட்சத்து 23 ஆயிரத்து 713 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், அந்த வரித் தொகையைவிட மத்திய அரசு இதுவரை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தொகை 2 லட்சத்து 88 ஆயிரத்து 627 கோடி ரூபாயும் மானியமாக 2 லட்சத்து 58 ஆயிரத்து 338 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார்.

மேலும் நீண்ட கால மூலதன செலவுக்காக வேண்டி வட்டி இல்லாமல் 6412 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்தத் தொகை 50 ஆண்டுகளுக்குப் பின் திரும்ப அளிக்கத்தக்கது. அதற்கு அதுவரை வட்டி என்ன வருகிறது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்றார்.
ஆக, மொத்தமாக 6 லட்சத்து 96 ஆயிரத்து 666 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு கணக்கை வெளியிட்டார்.
ஆனால், அவர் குறிப்பிட்ட பேசி உள்ள தொகைகளைக் கூட்டினால் 5 லட்சத்து 53 ஆயிரத்து 377 கோடி ரூபாய்தான் வருகிறது என்றும் சுமார் 1 லட்சத்து 50 கோடி ரூபாய் கூடுதலாகக் கொடுத்ததுபோல் நிர்மலா சீதாராமன் பேசி இருப்பதாக விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள் சில எதிர்க்கட்சியினர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பொருளாதாரம் பற்றிய விசயங்களில் தொடர்ந்து கருத்துகளைக் கூறிவருபவருமான ஆனந்த் சீனிவாசன், "தமிழ்நாட்டிலிருந்து 1 ரூபாய் வரியை மத்திய அரசு வாங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு மத்திய அரசு வெறும் 40 பைசாவைத்தான் திரும்ப அளிக்கிறது.

13 லட்சம் கோடி ரூபாய் வரியை வாங்கிக் கொண்டு, 5 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப அளித்திருக்கிறார்கள். உண்மை நிலை இப்படி இருக்க, 6 லட்சத்து 23 ஆயிரத்து 713 கோடி ரூபாய்தான் வசூல் செய்துள்ளோம் சொல்லி இருக்கிறார்.
அதாவது, வெறும் வருமானவரி வசூலை மட்டும் சொல்கிறார்கள். மறைமுக வரியாக 60% வசூலித்திருக்கிறார்கள். அது எப்போது ஞாபகம் வரும் என்று தெரியவில்லை.கூட்டிக்கழித்துப் பார்த்தால் நிர்மலா சீதாராமன் கணக்கு தப்பாக வருகிறது. இது கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ காமெடி போல உள்ளது" என்கிறார்
இதைப்போலவே இதே நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி, தனக்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து வெள்ள நிவாரண நிதி கிடைக்கவில்லை என்று முறையிட்டார். அப்போது உரிய ஆவணங்களை வழங்கினால், நிதியானது கிடைக்கும் என்று உறுதிமொழி கொடுத்தார் மத்திய அமைச்சர்.












Click it and Unblock the Notifications