உதயநிதி பிறந்தநாள்; இளைஞரணியின் மெகா ஏற்பாடு ; கண்டித்த அறிவாலயம்! பின்வாங்கிய அன்பகம்!
சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வாழ்த்துக் கூறுவதாக கூறி எந்த இடத்திலும் பேனர் வைக்கக் கூடாது என அன்பகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலில் விமரிசையாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்த நிர்வாகிகளை ஊக்குவித்த அன்பகம், அறிவாலயம் கண்டிப்பு காட்டிய பிறகே இந்த மெசேஜை பாஸ் செய்ததாம்.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாட எண்ணிய நிலையில் அதற்கு தலைமை போட்ட அணையால் நிர்வாகிகள் பலரும் ஏமாற்றம் அடைந்ததாக தெரிகிறது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.. திமுக வைத்திருக்கும் திட்டம்.. பலன் தருமா? அல்லது, விமர்சனம் வருமா?
உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்தநாள் வரும் 27-ம் தேதி சனிக்கிழமை வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணியினர் அவரது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாட திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை கவனித்து வருகின்றனர். பல ஊர்களில் அமைச்சர்கள் தலைமையிலேயே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.
அன்பகம்
இந்நிலையில் திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகத்திலிருந்து நிர்வாகிகளை தொடர்பு கொண்ட முக்கியப் பிரமுகர் ஒருவர், பேனர், கட் அவுட் என்று வைத்து தேவையின்றி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட வேண்டாம் என்றும் பேனர் வைப்பதை முற்றிலும் கைவிட்டுவிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை மட்டும் சிறப்பாக நடத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளாராம். இதேபோல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆர்வமிகுதியான காரியங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
அணை போட்டு
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஊருக்குள் பந்தாவாக கொண்டாட விரும்பிய இளைஞரணி நிர்வாகிகளுக்கு இது சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆளுங்கட்சியான பிறகு உதயநிதி பிறந்தநாளை முதல்முறையாக கொண்டாடவுள்ள நிலையில், கொண்டாட்டத்துக்கு இப்படி அணை போடுகிறார்களே என உதயநிதி மீது கொண்ட அன்பு காரணமாக அவரது ஆதரவாளர்கள் பலரும் நொந்துக்கொள்வதை அறியமுடிகிறது.
பின் வாங்க காரணம்
அன்பகத்திலிருந்து சென்ற இன்ஸ்ட்ரக்ஷன் பின்னணியில் அறிவாலயம் காட்டிய கண்டிப்பு தான் காரணம் எனக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். இதனால் தான் முதலில் நிர்வாகிகளை ஊக்குவிக்கும் வகையில் தடபுடலாக கொண்டாட்ட ஏற்பாடுகளை கவனிக்குமாறு கூறிய அன்பகம், பிறகு அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில் உதயநிதி ஸ்டாலின் தேவையற்ற சர்ச்சையில் சிக்கக் கூடாது என்பதே தலைமையின் எண்ணவோட்டமாக இருக்கிறதாம்.