எனக்கு இன்னொரு பேரு இருக்கு.. "டாக்டர்..." விரைவில்.. கலக்கும் மகேஷ் பொய்யாமொழி!
சென்னை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடற்கல்வித் துறையில் பிஎச்டி ஆய்வுப் படிப்பைத் தொடங்கியுள்ளார்.
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும் அன்பில் பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவார். இவர் திமுகவின் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டசபைத் தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதே தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வென்றார்.

எம்சிஏ பட்டதாரி
43 வயதாகும் அன்பில் மகேஷ் எம்சிஏ பட்டதாரி ஆவார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சாப்ட்வேர் டெவலப்பராக பணியாற்றிய அன்பில் மகேஷ், திமுகவில் இணைந்தார். இவர் திமுக இளைஞரணி செயலாளரும் முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் நண்பனாவார். 3 தலைமுறைகளாக இருவரது குடும்பமும் நண்பர்களாக உள்ளனர்.

3 தலைமுறையாக தொடரும் நட்பு
ஆரம்பத்தில் அன்பில் மகேஷின் தாத்தா அன்பில் தர்மலிங்கமும் கருணாநிதியும் நெருக்கமானவர்கள். அது போல் அன்பில் மகேஷின் தந்தை அன்பில் பொய்யாமொழியும் மு.க.ஸ்டாலினும் இரண்டாவது தலைமுறையாக நெருக்கமாக இருந்து வந்தனர். தற்போது இவர்களது மகன்களான அன்பில் மகேஷும் உதயநிதியும் கடந்த பல ஆண்டுகளாக நட்பு பாராட்டி வருகிறார்கள்.

அன்பில் மகேஷ்
2000 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்வை தொடங்கி அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். தமிழகத்தில் இளைஞர்களுக்கு மிக சிறந்த உத்வேகமாக இருந்து வருகிறார். முதல் முறையாக அமைச்சராகியுள்ள மகேஷ் , பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர்
நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிகபடியான கேள்விகளுக்கு பதிலளித்து முதலிடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் அன்பில் மகேஷ் உடற்பயிற்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டவர். அனைவரும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவார்.
Recommended Video

உடற்கல்வித் துறை
தற்போது அன்பில் திருச்சி தேசிய கல்லூரியில் உடற்கல்வித் துறையில் பிஎச்.டி ஆய்வுப் படிப்பை தொடங்கியுள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு உடற்கல்வியியல் தொடர்புடைய திறனை மேம்படுத்துதல், மாணவர்களின் பங்கேற்பு, கற்றலில் ஈடுபாட்டை அதிகரிப்பது குறித்த தன்னுடைய பிஎச் டி ஆய்வின் ஆராய்ச்சிக்கான முன்வடிவத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் மணிசங்கர், மற்றும் தேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன் உள்ளிட்டோரிடம் சமர்ப்பித்துள்ளார். இவரை பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications