காங்கிரஸை தோற்கடிப்பதே திமுக தான்.. அவங்களே முடிச்சுருவாங்க.. அன்புமணி பகீர்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதே திமுக தான் என்று பாமக அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது [Anbumani spoke about DMK].
சென்னையில் பாமக மாணவர் சங்கத்தின் பொதுக்குழு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், நம் கொள்கைகள், செயல் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். இன்றைக்கு 70 விழுக்காடு மக்கள் தேர்தலில் வாக்களிக்கிறார்கள். வருகின்ற நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

மக்கள் கோபம்
தமிழ்நாட்டில் 16 சட்டமன்ற தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 12 முதல்வர்கள் பதவியேற்றுள்ளனர். இவர்களில் மோசமான முதல்வர் என்று ஸ்டாலின் பெயரெடுத்துள்ளார். அவருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பவர்புல்லான பதவியை வைத்துக் கொண்டு ஒரு குடும்பம் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். அனைத்து மக்களும் கோபத்தில் உள்ளனர்.
காங்கிரஸை திமுக தோற்கடிக்கும்
தமிழ்நாட்டில் 208 அரசுப்பள்ளியை மூடியுள்ளனர். உங்களால் அரசுப்பள்ளியை நிர்வகிக்க முடியவில்லை என்றால் ஒடி செல்லுங்கள். திமுக கூட்டணியை அவர்களே முடித்துவிடுவார்கள். துரோகத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதே திமுக தான். நிறைய சிக்கல்கள் உள்ளன. இந்தமுறையும் அதுதான் நடக்க போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.
திமுக - அதிமுக இடையே தான் போட்டி
மற்றவர்களை பற்றி பொருட்படுத்த வேண்டாம். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமூகமாக உள்ளது. வேகமாக செயல்படுகிறோம். இந்த தேர்தல் திமுகவுக்கும் - அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி. இதுதான் கள எதார்த்தம் என்று பேசியுள்ளார். இந்த தேர்தலை நமக்கு முக்கியமான ஒரு தேர்தலாக எடுத்து பணியாற்ற வேண்டும் என்றார். அன்புமணியின் இந்தக் கருத்து திமுக கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications