ராமதாஸ் மீது காங்கிரஸ், விசிகவுக்கு திடீர் பாசம்.. இதுதான் திமுகவின் சூழ்ச்சி.. அன்புமணி ஆவேசம்!
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கும், விசிகவுக்கும் திடீரென ராமதாஸ் மீது பாசம் வந்துள்ளது ஏன் என்று பாமக செயல் தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை திடீரென ராமதாஸை சந்தித்ததும், திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்ட விசிகவினர் ராமதாஸை புகழ்வதும் திமுகவின் சூழ்ச்சி என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் போக்கு உச்சத்தில் இருக்கிறது. பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தலைவராக தாமே தொடர்வதாக அறிவித்தார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இருவருக்கும் இடையில் மோதல் இருந்து வரும் சூழலில், புதிய நிர்வாகிகளையும் இருவரும் நியமித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

அன்புமணி குற்றச்சாட்டு
இதனால் பாமகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுகவே காரணம் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் ராமதாஸ் இதனை மறுத்ததோடு, முன்னாள் முதல்வர் கருணாநிதி போல் கடைசி மூச்சு வரை தலைவராக தாம் இருக்க போவதாகவும், ஸ்டாலினை போல் அன்புமணி முணுமுணுப்பு இல்லாமல் இருக்க அட்வைஸ் செய்தார்.
ராமதாஸ் பாராட்டு
இதனிடையே ராமதாஸ் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பிடிக்கவில்லை என்று கூறி இருந்தார். அதேபோல் திருமாவளவனுக்கு சில பாராட்டுகளையும் கொடுத்திருந்தார். இதனை பகிர்ந்த விசிக எம்பி ரவிக்குமார், ராமதாஸ்-க்கு நன்றி கூறி இருந்தார். அதேபோல் திருமாவளவனும், பாமகவில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி பேச விரும்பவில்லை.
செல்வப்பெருந்தகை சந்திப்பு
ஆனால் பாஜக மற்றும் பாமக இருக்கும் அணியில் விசிக இருக்காது என்றும் தெளிவுப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார். இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை பேசுகையில், இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்.
தேர்தல் கூட்டணி?
தேர்தல் கூட்டணியோடு ஒப்பிட தேவையில்லை. ஏனென்றால் இந்தியா கூட்டணியின் தமிழக தலைவராக இருக்கும் முக ஸ்டாலின் தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனால் திமுக தேர்தல் கூட்டணி மாறுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பாமக சமூக ஊடக பிரிவு ஆலோசனை கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெற்றது.
திமுகவின் சூழ்ச்சி
அதில் அன்புமணி பேசுகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மீது காங்கிரஸ் கட்சிக்கும், விசிகவுக்கும் திடீர் பாசம் ஏன்? என்றைக்குமே ராமதாஸை பற்றி புகழ்ந்து பேசாத திருமாவளவன், தற்போது பேசுவது ஏன்? செல்வப்பெருந்தகை திடீரென ராமதாஸை சந்திப்பது ஏன்? இதுதான் திமுகவின் சூழ்ச்சி. திமுகதான் பாமகவின் எதிரி. திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications