திமுக மாவட்ட செயலாளர் கையில் காவல்துறை! தமிழ்நாட்டை கஞ்சா நாடாக மாற்றிவிட்டார்கள்! அன்புமணி புகார்!
காஞ்சிபுரம்: தமிழக காவல்துறை திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. தவறு செய்தவர்களை விடுவிக்க கட்டாயப்படுத்துகிறார்கள் எனவும், கொடுத்த வாக்குறுதி எதையுமே திமுக நிறைவேற்றவில்லை, அதனால் மீண்டும் தமிழ்நாட்டிற்கு திமுக வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் நூறு நாட்கள் நடைபயணத்தை அன்புமணி தொடங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் மூன்றாவது நாள் நடை பயணத்தை தொடங்கிய அவர், தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினார்.
பின்னர் பொதுமக்களிடையே பேசிய அன்புமணி," திமுக அண்ணாவின் பெயரை சொல்வதற்கான தகுதியை இழந்துவிட்டது. அண்ணாவின் கொள்கைகளை தற்போது கடைபிடிப்பதில்லை. அண்ணா பூரண மதுவிலக்கு என்ற கொள்கையை கடைப்பிடித்தார்.

அவர் உயிர் வாழ்கின்ற வரை அதனை நிறைவேற்றினார். அதன்பிறகு வந்தவர்கள் மதுவை திறந்து விட்டு பிறகு தமிழ்நாடு என்று சொன்னாலே அது சாராய நாடு, கஞ்சா நாடு என மாற்றி விட்டனர். பெண்கள் மாணவர்கள் தொழிலாளர்கள் நெசவாளர்கள் உள்ளிட்டவர்களின் உரிமைகளை மீட்பதற்காக இந்த நடை பயணத்தை நான் தொடங்கியுள்ளேன். கேட்பது மக்களின் உரிமை.. செய்து கொடுப்பது அரசின் கடமை. அதற்கு முதலில் உங்களது உரிமை என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
அரசியலமைப்பு நமக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகள் பல இன்னும் ஏழை மக்களுக்கு கிடைக்காமல் உள்ளது அது எது என்பதை விளக்கவும் அதை பெறுவது எப்படி என்பதை விளக்கவும் நான் இங்கு வந்துள்ளேன். தமிழக காவல்துறை திமுக மாவட்ட செயலாளர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. தமிழகத்தில் விதவிதமான பொருட்களில் கஞ்சா அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைக்கிறது. இதற்கு நேரடி காரணம் முதலமைச்சர் தான் பொறுப்பெடுக்க வேண்டும் ஏனென்றால் அவருக்கு கீழ் தான் தமிழக காவல்துறை இயங்கிக் கொண்டுள்ளது.
காவல்துறைக்கு தெரியாமல் யாராவது போதை பொருட்களை விற்க முடியுமா? தமிழகத்தில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுக மாவட்ட செயலாளர்கள் கட்டுப்பாட்டில் காவல்துறை செயல்படுகிறது.. குற்றவாளிகள் என பிடித்தால் உடனே போன் செய்து அவர்கள் நம்ம ஆட்களை விட்டு விடுங்கள் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் சொல்கிறார்கள். உதாரணம் அந்த திமுக நிர்வாகி ஜாபர் சாதிக். அவர் 3000 கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்பட்டார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் தவறு செய்தீர்கள் அந்த தவறை மீண்டும் செய்து விடாதீர்கள். திமுக தமிழ்நாட்டிற்கு வேண்டாம். சுயமரியாதையுடன் நாம் வாழ வேண்டும் என்றால் அதற்கு சமூக நீதி கிடைக்க வேண்டும். வாழ்க்கையின் அடித்தளமே சமூக நீதிதான். இது ஏதோ ஒரு சமுதாயத்திற்கான பிரச்சினை கிடையாது; அனைத்து சமுதாயத்திற்கும் பொருந்தும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால்தான் தமிழ்நாட்டில் எந்தெந்த சமூகங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதை கண்டறிய முடியும்.
அப்படி கண்டறிந்தால் தான் அவர்களுக்கான மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி அவர்களை வாழ்க்கையில் உயர்த்த முடியும். 1931 இல் எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வைத்து தான் தற்போது வரை மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில் இப்போது இட ஒதுக்கீடு கொடுப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.. தற்போது மக்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிந்து இட ஒதுக்கீடும் நலத்தட்ட உதவிகளும் கொடுக்கப்பட வேண்டும்.
ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்றார்கள் மாத மாதம் மின் கட்டணம் எடுக்கும் முறையை அமல்படுத்துவோம் என்றார்கள். படிப்படியாக மதுவை ஒழிப்போம் என்றார்கள். ஆனால் கொடுத்த வாக்குறுதி எதையுமே திமுக நிறைவேற்றவில்லை. அதனால் மீண்டும் தமிழ்நாட்டிற்கு திமுக வேண்டாம். ஊழல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது." என்றார்.












Click it and Unblock the Notifications