நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ்
சென்னை: கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 62 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத மோசமான அக திமுக ஆட்சி நடைபெறுகிறது என விமர்சித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இபிஎஸ்ஐ தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது தவறு எனவும் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கின்ற ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பு இப்படி ஒரு சூழல் இருந்தது கிடையாது.
தமிழ்நாட்டை எத்தனையோ தலைவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால் திமுக ஆட்சியில், பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பாலியல் தாக்குதல் அதிகரித்துள்ளது. நானும் டெல்டா காரன் தான் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொல்கிறார்..

அன்புமணி ராமதாஸ்
இதுதான் உலகத்திலே மிகச்சிறந்த நகைச்சுவையாக நான் பார்க்கிறேன். டெல்டாவில் விவசாயிகள் மிகவும் மோசமான கஷ்டமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திற்கு ஏற்ப ஏதோ ஒன்றை பேசிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர். முதலமைச்சரை ஒரு பொம்மை போல வைத்துக் கொண்டு அவரை சுற்றி நான்கு பேர் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பிரச்சனை என்னவென்று தெரியவில்லை. அவரை சுற்றி உள்ள நான்கு வியாபாரிகள் பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக கூட்டணி
தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இபிஎஸ் வருவார். 2021 தேர்தலுக்கு முன்பு இதே கும்பகோணம் மண்ணில் வைத்து 20 முறைக்கு மேல் முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் . நான் ஆட்சிக்கு வந்தவுடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணம் மாவட்டத்தை தனியாக பிரிப்பேன் என்று சொன்னார். ஆனால் ஐந்து ஆண்டு காலத்தில் அதனை செய்யவில்லை.
8000 ரூபாய் கூப்பன்
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆறு புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் ஒரே ஒரு மாவட்டத்தை கூட பிரிக்கவில்லை. மக்கள் சேவைகளை பெறுவதற்கு கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் வரை பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. திமுக கொடுப்பது 8000 ரூபாய் போலி கூப்பன்; மக்களை முட்டாளாக்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் கூப்பனை கொடுத்து ஏமாற்றி விடலாம் என நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் முடிவு செய்து விட்டார்கள்..
எடப்பாடி பழனிசாமி
டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது இபிஎஸ் தான். இல்லையென்றால் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற நிறுவனங்களைக் கொண்டு வந்து டெல்டாவை நாசப்படுத்தி இருப்பார்கள். இபிஎஸ் அடிப்படையில் ஒரு விவசாயி அதனால் விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்தவர் ஆனால் மு க ஸ்டாலினுக்கு விவசாயிகளின் கஷ்டம் பற்றி எதுவும் தெரியாது.
மு க ஸ்டாலின்
முதலமைச்சர் மு க ஸ்டாலின், இபிஎஸ்ஐ தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். ஏன் எங்களுக்கே முதலமைச்சர் பற்றி பேச முடியாதா? திமுகவை பற்றி, அவர்களின் குடும்பத்தை பற்றி பேச தெரியாதா பேசினால் அது தரம் தாழ்ந்து போகும் என்பதனால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். இந்த ஆண்டு காலம் ஆட்சி செய்துவிட்டு அவர்களது சாதனையை சொல்லி வாக்கு கேட்க துப்பு இல்லை. மக்கள் நிச்சயம் அவர்களுக்கு பாடத்தை கற்பிப்பார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications