நான் மத்திய அமைச்சராக இருந்தபோது.. Pepsi CEO 3 ஆண்டுகளாக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார்! -அன்புமணி
சென்னை: தாம் மத்திய அமைச்சராக இருந்த போது பெப்சி குளிர்பான நிறுவனத்தின் அப்போதைய தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி, தன்னிடம் 3 ஆண்டுகளாக் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டும் தாம் கொடுக்கவில்லை என்று பழைய ஃபிளாஷ்பேக்கை பகிர்ந்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இத்தகைய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் பெப்சி, கோக் போன்ற பானங்களில் அளவுக்கு அதிகமான நச்சுப் பொருட்கள் இருப்பதாக சுனிதா நாராயணன் என்பவர் 2000 காலக்கட்டத்தில் புகார் எழுப்பினார்.

இதையடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரி கேண்டீன்களில் பெப்சி, கோக் பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் அப்போதைய பெப்சி சி.இ.ஓ. இந்திரா நூயி, மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியை சந்திப்பதற்காக 3 ஆண்டுகளாக நேரம் கேட்டிருக்கிறார்.
ஒரு முறை கூட இந்திரா நூயிக்கு தாம் நேரம் கொடுக்கவில்லை என அன்புமணி தெரிவித்துள்ளார். இந்திரா நூயி நினைத்தால் உலகம் முழுவதும் எந்த நாட்டு தலைவர்களுடனும் பேச முடியும் என்ற சூழல் இருந்த போதும் தாம் அவரை சந்திக்க விரும்பவில்லை என்றார்.
ஒரு முறை அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றிருந்த போது, அப்பாயிண்ட்மெண்ட் கேட்காமலேயே தன்னை சந்திக்க இந்திரா நூயி வந்துவிட்டதாகவும், இவர் ஏன் இங்கே வருகிறார், பார்த்து பேச முடியாது என தாம் தனது உதவியாளரிடம் கூறிவிட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
கடைசியில் தனது உதவியாளர் தான், இந்திரா நூயியை பார்த்து பேசிவிடுமாறும், 3 ஆண்டுகளாக அவர் நேரம் கேட்டும் நாம் கொடுக்கவில்லை எனவும் கூறி பேச வைத்தார் என பழைய பிளாஷ்பேக் நிகழ்வை பகிர்ந்துள்ளார். பாமக இளைஞரணியினர் இதனை ஷார்ட்ஸ் ஆக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications