"இங்கேதான் உதயசூரியன் உதித்தது.. திராவிட இமயம் வாழ்ந்தது!" இதய வடிவில் கருணாநிதி திருவாரூர் இல்லம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, அவரது திரூவாருர் இல்லத்தில் பொதுமக்கள் அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
Recommended Video
தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர் கருணாநிதி. 5 முறை தேர்தல்களில் வென்று முதல்வர் பொறுப்பை ஏற்ற கருணாநிதி தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களைக் கொடுத்துள்ளார்.
அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைவராகப் பொறுப்பு ஏற்ற அவர், சுமார் 50 ஆண்டுகளாக திமுகவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இப்படி பல்வேறு சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரர்.

கருணாநிதி
கருணாநிதி 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி திருக்குவளையில் பிறந்தவர். சினிமா துறையிலும் சரி, அரசியலிலும் சரி இவர் பல்வேறு சாதனைகளைப் படைத்து உள்ளார். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்குப் பின்னர், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். பெண்களுக்குச் சொத்துரிமை, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு என்று அவர் பல்வேறு திட்டங்களாகக் கொண்டு வந்துள்ளார்,

முன்னோடி திட்டங்கள்
மேலும், கை ரிக்சா ஒழிப்பு, குடியை மாற்று வாரியம், பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களும் கூட அவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்டதே! இப்படி தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்து பல்வேறு சாதனைகளைப் படைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி காவிரி மருத்துவமனையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அமைதி பேரணி
கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு நலத்திட்டங்கள் திமுக சார்பில் வழங்கப்படுகிறது. இன்று காலை சென்னையில் மாரத்தான் போட்டிகளும் நடத்தப்பட்டன. மேலும், திமுக சார்பில் தலைநகர் சென்னையில் பிரம்மாண்ட அமைதி பேரணியும் நடைபெற்றது. அதேபோல மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடமும் வங்கக்கடல் போல அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

இதய வடிவம்
இந்தச் சூழலில் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருணாநிதியின் திருவாரூர் இல்லம் இதய வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படம் இதய வடிவில் பூக்களைக் கொண்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாகச் செல்வோர் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தினர்,

திராவிட இமயம்
இதய வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் படத்திற்குக் கீழ், "இங்கேதான் முரசொலித்தது.. உதயசூரியன் உதித்தது.. இங்கே தான் திராவிட இமயம் வாழ்ந்தது.. வளர்ந்தது." என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.












Click it and Unblock the Notifications