சென்னை ஆவடி அருகே விபத்தில் பாமக பிரமுகர் கார்த்திகேயன் பலி- தனியார் பேருந்து தீ வைத்து எரிப்பு
சென்னை: சென்னையை அடுத்த ஆவடி அழுதூர்மேட்டில் விபத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன் பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விபத்துக்கு காரணமான தனியார் பேருந்தை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அழுதூர்மேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மீன் வியாபாரம் செய்து வந்தார். பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.
Recommended Video

இந்த நிலையில் ஆவடி அருகே அணைக்கட்டுசேரி பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் கார்த்திகேயன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பேருந்து கார்த்திகேயனின் இரு சக்கர வாகன மீது மோதியது.
மேலும் பேருந்தின் சக்கரம் கார்த்திகேயன் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கார்த்திகேயனின் வீட்டுக்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தீ வைத்து எரித்த பொதுமக்கள்
இதனை கண்ட அப்பகுதியினர் மற்றும் அவரது உறவினர்கள் ஆத்திரத்தில் விபத்துக்கு காரணமான பேருந்தை அடித்து நொறுக்கியதோடு தீயிட்டு கொளுத்தினர்.
|
பேருந்து கருகியது
தீ பேருந்து முழுதும் மளமளவென பரவி பேருந்து முழுவதும் கருகியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர் ஆனால் அதற்குள் பேருந்து கருகி நாசமானது.

அதிரடிப்படை குவிப்பு
அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அசம்பாவிதங்களை தவிர்க்க அதிரடிப்படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து பட்டாபிராம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதேபோல் விபத்து சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
|
ஜி.கே.மணி இரங்கல்
இதனிடையே கார்த்திகேயன் மறைவுக்கு பாமக தலைவர் ஜி.கே. மணி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணைத் தலைவர் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அடுத்துள்ள அழுதூர்மேடு கார்த்திகேயன் விபத்தில் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தைதெரிவித்துக்கொள்கிறோம் என பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications