பள்ளிக்கரணையில் 7 வீடுகளில் காரில் சென்று 200 பவுன் கொள்ளை! அண்ணா பல்கலை. ஞானசேகரன் மீண்டும் கைது
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் சிறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரை சென்னை போலீஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் அவர் பல்வேறு பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பல்வேறு பகுதிகளில் 7 வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்தார்.
அவர் மேலும் கூறுகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 7 வீடுகளில் 200-க்கும் மேற்பட்ட பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்ததாகவும் காரில் சென்று நோட்டமிட்டு கொள்ளையடித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர் வேறு இடங்களில் எங்காவது கொள்ளை அடித்திருக்கிறாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி ஒரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோட்டூர் பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது தப்பியோட முயன்ற ஞானசேகரன் கீழே விழுந்ததில் இடது காலும் இடது கையும் முறிந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை போலீஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த போதுதான் கொள்ளை சம்பவம் குறித்து தெரிவித்தார். அதாவது பள்ளிக்கரணை பகுதிகளில் பெரிய வில்லா வகை வீடாக பார்த்து திருடுவாராம். இப்படி திருடி திருடி சேர்த்த நகைகளை விற்று கிடைத்த பணத்தில் சொகுசு கார் வாங்கினாராம். பிறகு அந்த காரிலேயே போய் திருடியுள்ளார்.
இவர் காரிலேயே வந்து போனதால் புது ஆள் நுழைவது குறித்து யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை என தெரிகிறது. அது போல் இந்த கொள்ளையடித்த நகையை விற்று கிடைத்த பணத்திலேயே பிரியாணி கடை வைத்ததாகவும் ஞானசேகரன் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவர் வேறு எங்கெல்லாம் திருடினார். திருடிய நகைகளை வேறு எங்காவது வைத்திருக்கிறாரா என்பது குறித்து விசாரணை நடத்த பள்ளிக்கரணை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
அந்த 200 பவுனையும் மீட்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அது போல் கொள்ளையடிக்கும் போதும் அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications