அண்ணாமலை சீரியஸா சாட்டையில் அடிக்க அடிக்க..அடக்க முடியாமல் சிரித்த நபர்! வீடியோவில் மாட்டிக்கிட்டாரே
சென்னை: சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இந்நிலையில் அண்ணாமலை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டிருக்கும் போது, பின்னால் நின்ற ஒருவர் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதனை ஜூம் செய்து பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.

மேலும் இது தொடர்பாக சென்னையில் பிரியாணி கடை நடத்தி வருபவரும், திமுகவை சேர்ந்த வருமான ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு கை கால்களில் மாவு கட்டு போடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாணவி பாலியல் தாக்குதல்:
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவியின் பெயர், விலாசம், தொலைபேசி எண் உள்ளிட்டவை அந்த எஃப்ஐஆர்-ல் இடம் பெற்று இருந்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.
பாஜக அண்ணாமலை:
மேலும் இதற்கு காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதோடு,”தி.மு.கவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்களுக்கு விரதமிருந்து அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனிடம் முறையிட உள்ளேன். நாளை காலை 10 மணிக்கு எனது இல்லத்திற்கு வெளியே எனக்கு நானே சாட்டையால் 6 முறை அடித்துக் கொள்ள போகிறேன்” என்று சபதமிட்டு, செய்தியாளர்கள் சந்திப்பின்போதே தனது செருப்பை அவர் கையால் கழற்றினார்.
தனக்குத் தானே சாட்டையடி:
இதற்கிடையே சொன்னது போலவே இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் தன்னைத்தானே சாட்டையால் எட்டு முறை அடித்துக் கொண்டார் அண்ணாமலை. தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் அவரை கட்டி அணைத்துக் கொண்டு இனிமேல் அடித்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். அண்ணாமலையின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
சிரித்த நபர்:
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை சாட்டையால் தானே அடித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் நின்ற ஒருவர் சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒன்றிலிருந்து எட்டு வரை அண்ணாமலை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டிருந்த போது, பின்னால் பதாகைகளை தாங்கி நின்று கொண்டிருந்த பாஜகவினர் வெற்றிவேல் வீரவேல் என கூறினர்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
அப்போது அண்ணாமலையின் பின்னால் நின்று கொண்டிருந்த கருப்பு வேட்டி சட்டை அணிந்திருந்த நபர் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாததால் வாயை மூடிய அவர் பின்னர் ஒருவாராக சமாளித்து வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டார். தற்போது இதனை நோட்டமிட்ட நெட்டிசன்கள் அந்த வீடியோவை ஜூம் செய்து பரப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications