மாணவி பலாத்காரம்.. குற்ற இடத்திலிருந்து ஞானசேகரன் "சார்" என போனில் பேசியது யாரிடம்? தமிழக அரசு தகவல்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை. குற்றத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை பொறுத்தவரை, குற்றவாளியின் போன் அழைப்புகளை சரிபார்த்த போது, அது ஏரோ ப்ளேன் மோடில் இருந்தது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சென்னை கோட்டூர்புரத்தில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் அவர் மீது இருக்கும் நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று காலை தொடங்கியது. வழக்கை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், சீலிடப்பட்ட விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் வைத்த வாதங்கள் வருமாறு:-
துரதிருஷ்டவசமான இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலைக்கழக வளாத்திற்கு 8 வழிகள் உள்ளன. அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிக தீவிரமாக கருதப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் ஆணி வேர் வரை விசாரணை நடத்தப்படும்.
எவரையும் காவல் துறை பாதுகாக்கவில்லை என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கவே காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். விசாரணை ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது. அதிகாரிகள் பணி விதிகள் படி, செய்தியாளர்களை சந்திக்க அரசு அனுமதி தேவையில்லை. அதற்கு எந்த தடையும் இல்லை. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் அலுவல் ரீதியாக செய்தியாளர்களை சந்திக்கலாம் தனிப்பட்ட முறையில் தான் செய்தியாளர்களை சந்திக்க முடியாது.
காவல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பை நடத்த முடியும். இதுவரை நடந்த விசாரணையில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரிய வந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார். ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை. குற்றத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை பொறுத்தவரை, குற்றவாளியின் போன் அழைப்புகளை சரிபார்த்த போது, அது ஏரோ ப்ளேன் மோடில் இருந்தது.
தனக்கு பின் பெரிய குழு இருக்கிறது என காட்டுவதற்காக சார், என்று யாரிடமோ பேசுவதை போல போன் செய்திருக்கிறார். போலீசார் முதல் தகவல் அறிக்கையை கசியச் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. காவல் துறை கசியவிடவில்லை. இது சம்பந்தமாக விசாரிக்கப்படும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாப்பது காவல் துறையின் பொறுப்பு. பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இந்த பொறுப்பு உள்ளது.
எப்.ஐ.ஆர்.ஐ கசியச் செய்த 14 பேருக்கு எதிராக விசாரணை நடக்கிறது. முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்ட பின் சிட்டிசன் போர்ட்டலில் இருந்து 14 பேர் அதனை பார்த்துள்ளனர்" என்றார். அப்போது, 'முடக்கப்பட்ட பின் அதனை எப்படி பார்க்க முடியும்" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், "என்.ஐ.சி.யிடம் இதுபற்றி கேட்ட போது, ஐ.பி.சி யில் இருந்து பி.என்.எஸ். சட்டத்துக்கு மாற்றிய போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியாகி விட்டது.
முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்ட விவகாரத்தை பொறுத்தவரை, சிசிடி என் எஸ் முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவேற்றம் செய்யப்படும். பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விவரங்களை கம்ப்யூட்டர் தடுத்து விடும். கோட்டூர்புரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தயாரித்த பின் அது இணையதளத்தில் பதிவாகி விட்டது. பின் அது முடக்கப்பட்டது. அதன் விவரங்களை சிலர் எடுத்துள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications