அப்போ வலிப்பு.. இப்போ வாந்தி, பேதி.. ஞானசேகரனிடம் விடிய விடிய நடந்த விசாரணை! மறுபடியும் ஜெயில்!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகருக்கு வாந்தி பேதி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் மீண்டும் அவரை சிறையில் அடைத்துள்ளனர். முன்னதாக வலிப்பு வந்ததன் காரணமாக ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த இளம் பெண் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பல்கலைக் கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

சென்னையில் பிரியாணி கடை நடத்தி வரும் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் அண்ணா பல்கலை வளாகத்திற்குள் அத்துமீறி சென்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்தன. இதை அடுத்து ஞானசேகரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதனை அடுத்து சென்னை போலீஸ் இடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வழக்கு மாற்றப்பட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மாணவியின் வாக்குமூலம் அடங்கிய எஃப்ஐஆர் வெளியானது குறித்து இரண்டு வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கைதாகியுள்ள ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து ஞானசேகரனின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்களில் இருக்கும் பெண்கள் யார் என்பது குறித்து விடிய விடிய விசாரணை நடத்தினர். மேலும் ஞானசேகரன் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் அடையாறு காவல் நிலையத்தை சேர்ந்த ஆறு போலீசார் அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களது செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த 22ஆம் தேதி அதிகாலை ஞானசேகருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஞானசேகரன் வலிப்பு வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதும், அவரது உடல்நிலை சீராக இருப்பதும் தெரியவந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஞானசேகரனை மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து அவரை மீண்டும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விசாரணைக்காக சேர்த்தனர்.
சிகிச்சைக்குப் பின் ஞானசேகரின் உடல் நலம் தேறிய நிலையில் நேற்று விசாரணை மீண்டும் தொடங்கிய நிலையில் மாலையுடன், ஏழு நாள் போலீஸ் காவல் முடிவடைந்தது. இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரனை போலீசார் ஆஜர் படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications