மீண்டும் மீண்டும் அதையே சொல்லும் அண்ணாமலை... பாஜக 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துவிட்டதாம்!
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துவிட்டதாக மீண்டும் கூறி இருக்கிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் அண்மையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி வார்டுகளில் பாஜக 22, நகராட்சி வார்டுகளில் 56, பேரூராட்சி வார்டுகளில் 230 இடங்களில் பாஜக வென்றுள்ளது.

குமரி மாவட்டத்தில் பாஜக
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பாஜக டெபாசிட்டை கூட பறிகொடுத்துள்ளது. ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துவிட்டது என கூறி வருகிறார்.

3-வது பெரிய கட்சி காங்.
தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படியே காங்கிரஸ் கட்சி மாநகராட்சி வார்டுகளில் 73, நகராட்சி வார்டுகளில் 151, பேரூராட்சி வார்டுகளில் 368 இடங்களைக் கைப்பற்றி 3-வது கட்சியாக உள்ளது. இதனால் அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மறுப்பு தெரிவித்து வருகிறார்.

சென்னையில் ராகுல்
இந்நிலையில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் எனும் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் பாஜக தொடர்ந்து கனவு காணலாம்.. ஆனால் பாஜகவை எப்படி களத்தில் எதிர்கொள்வது என்பது எங்களுக்கு தெரியும் எனவும் கூறியிருந்தார் ராகுல் காந்தி.

அண்ணாமலை விளக்கம்
இதற்கு உடனே பதிலளித்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம், 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸில் நிலைப்பாடுகளை விமர்சித்துள்ளார். அதேபோல் சத்தியமூர்த்தி பவனில் நாற்காலிக்காக நடந்த சண்டையையும் குறிப்பிட்டு அதனை முதலில் சரிசெய்யுங்கள் எனவும் கிண்டலடித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றத்தில் தமிழகத்தை ஒருபோதும் பாஜகவால் ஆளவே முடியாது என்கிற ராகுல் காந்தியின் பேச்சை குறிப்பிட்டு, உங்களுக்கு மிக்க நன்றி.. இப்போது தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துவிட்டது என கூறியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3%-க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ள நிலையிலும் கன்னியாகுமரி மாவட்ட கட்சியாக பாஜக சுருங்கியுள்ள நிலையிலும் மீண்டும் மீண்டும் 3-வது பெரிய கட்சி பாஜக என அண்ணாமலை கூறியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications