தமிழக உளவுத்துறை ஏடிஜிபிக்கு மிஷினரி குரூப்போடு லிங்க் உள்ளதாம்.. சொல்கிறார் அண்ணாமலை
சென்னை: தமிழக உளவுத்துறை ஏடிஜிபிக்கு மிஷினரி குரூப்புடன் தொடர்பு உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சிகளை பல்வேறு ஆதாரமான புகார்களுடன் விமர்சிப்பது வழக்கம். அரசியல் தலைவர்களின் மேடை பேச்சுகள், அரசியல் கட்சிகளின் பத்திரிகைகளில் எழுதப்பட்டுள்ளவை ஆகியவற்றை முன்வைத்தும் பரஸ்பரம் விமர்சனங்கள் முன்வைப்பதும் இயல்பானது.

முதல்வரும் மிசாவும்
ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவிக்கும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பகீர் ரகமாகத்தான் இருக்கின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 1976-ல் மிசா கொடுமையின் போது சிறையில் அடைக்கப்பட்டார்; முதல்வர் ஸ்டாலின் மீதான அடக்குமுறைகளை தாங்கிய முன்னாள் மேயர் சிட்டி பாபு மறைந்தார்.. மிசா கால சிறை கொடுமைகளை சிட்டிபாபுவே தமது கைப்பட எழுதிய டைரிக் குறிப்புகளில் எழுதியும் வைத்துள்ளார். அந்த டைரி குறிப்புகள் புத்தகமாக வந்துவிட்டது.

மிசா குறித்த அண்ணாமலை கேள்வி
அதேபோல் மிசா கால சிறை கொடுமைகள் தொடர்பான நீதிபதி இஸ்மாயில் கமிஷன் அறிக்கையும் கால சாட்சியமாக இருக்கிறது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின், மிசா காலத்தில் சிறைக்கு சென்றாரா? என அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கேள்வி கேட்பது எகத்தாளமானதானது மட்டுமல்ல.. திட்டமிட்ட பொய் பிரசாரமும் கூட என்பதை அனைவரும் அறிவர்.

ஏடிஜிபிக்கு மிஷினரி லிங்க்
இப்படியான திட்டமிட்ட அவதூறுகளை அண்ணாமலை விதம் விதமாக முன்வைத்திருக்கிறார். இதில் ஒன்றுதான் தமிழக உளவுத்துறை ஏடிஜிபி குறித்த மிக மோசமான விமர்சனமும் கூட. யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி: இவங்க ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த குரூப்தான் இருக்கனும் என்பது கொடுக்கப்பட்ட அஜெண்டா. உளவுத்துறையின் ஏடிஜிபிக்கு சிங்கிள் பாயிண்ட் அஜெண்டா கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு கிளியரா மிஷினரி குரூப்போட லிங்க் இருக்கு. அவருக்கு அதைப் போன்ற ஆபீசர்ஸ்தான் சென்சிடிவ் போஸ்ட்ல இருக்கனும். அவங்களை அங்க அங்க உட்கார வைக்கிறார்.

தொட்டுப் பார்க்கட்டுமே...
தஞ்சாவூர் லாவண்யா தற்கொலை வெளிப்பாடு, தென்மாவட்டத்தில் ஸ்கூலில் பைபிள் கொடுத்து படிக்க சொன்னதை சிஎன்என் நியூஸ்18 எக்ஸ்போஸ் செய்து உட்பட அனைத்துமே தமிழ்நாடு உளவுத்துறையின் ஆபரேஷன்தான். இது அபாண்டமானது அல்ல. அதை அவர்கள் மறுக்கட்டும். உண்மையை சொல்ல என்ன பயம்? நான் என்ன வங்கு (காட்டு எலி) மாதிரி படிச்சுட்டு வங்குலி மாதிரி வந்து உட்கார்ந்திருக்கேன்னா? என்னை தொட்டுப் பார்க்கட்டும். பார்த்துகலாம்னுதான் வந்திருக்கேன். இதுதான் அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளது. இப்படித்தான் தமிழக அரசியல் தலைவர்கள் இதுவரை யாருமே சொல்லாத பகீர் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications