ஆன்லைன் ரம்மி..அரசாணை பிறப்பிக்க தாமதம்..உயிர்பலிக்கு திமுக அரசே காரணம்.. அண்ணாமலை புகார்
சென்னை: அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளது. இதற்கு திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர், முதல்வர் ஆகியோரே பொறுப்பு என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆன் லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு தங்களது சொத்துகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பாக அவசர சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக தமிழக ஒரு அமைத்து ஆன் லைன் விளையாட்டுகள் தொடர்பாக ஆய்வு செய்து சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிஅன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில், தமிழக அரசு, அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி, 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28ஆம்தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது.
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் தரப்பில் சில விளக்கம் கேட்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என விளக்கம் கேட்கப்பட்டது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா.. அமைச்சர் ரகுபதியே ஒப்புக் கொண்டாரே.. பாயிண்டை பிடித்த அண்ணாமலை
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுதிடக்கோரி ஆளுநர் ஆர். என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த சட்டம் காலாவதியாக நவம்பர் 27 கடைசி நாளாக இருந்தது. இருப்பினும், ஆளுநர் கையெழுத்திடவில்லை. இதனால், தமிழக அரசு மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு சட்டம் இயற்றவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்கள் குற்றச்சாட்டு
இதனால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநர் ஆர். என். ரவியை கடுமையாக சாடி வருகின்றனர். மேலும், ஆன்லைன் ரம்மியால் இன்னொரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்தால் அதற்கு ஆளுநரே காரணம் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். மேலும், அமைச்சர் துரைமுருகன் கூறியபோது, ஆன்லைன் தடை சட்டம் குறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து பதில் கடிதம் எழுதி அவருக்கு அனுப்பியுள்ளோம். இனி முடிவு செய்ய வேண்டியது அவர்தான். அவரது முடிவை பொறுத்து எங்கள் முடிவு இருக்கும். ஆனால், இந்த விஷயத்தில் ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்றார்.
அமைச்சர் ரகுபதி
அவருக்கு தான் தெரியும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடந்த வாரம் கூறியிருந்தார். ஆளுநரை நாங்கள் கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் ஆளுநர் எங்களை கேள்வி கேட்க முடியும். அவர் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் சரியான விளக்கம் அளித்து இருக்கிறோம் என்று கூறினார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. ஆனால் ஒப்புதல் தாமதப்படுத்தியதற்கான காரணம் ஆளுநருக்குத்தான் தெரியும் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை ட்வீட்
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கு கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் திமுக அரசு அரசாணை வெளியிடவில்லை என்றும் வேண்டுமென்றே ஆளுநர் மீது பழி போடுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் குறித்து இன்று அண்ணாமலை போட்டுள்ள ட்வீட்டில் மீண்டும் தமிழக அரசை குற்றம் சாட்டியுள்ளார். அதில், அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என்று திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று கூறியுள்ளார்.
உயிர்பலிக்கு காரணம்
அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தேதிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தேதிக்கும் இடையே 12 நாட்கள் இடைவெளி இருந்தது. அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளது. இதற்கு திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர், முதல்வர் ஆகியோரே பொறுப்பு என இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.