பள்ளிக் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து.. சிதிலமடைந்த கட்டிடங்களில் பாடம் நடத்துவதா? கொதிக்கும் அண்ணாமலை
சென்னை: 2 பள்ளிகளில் மாணவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
திருவள்ளூரை அடுத்த சிறுவனூர் கண்டிகை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில்
வழக்கம் போல் பள்ளிக்கு வந்த சிறுவர்கள் பள்ளியின் பழைய கட்டிடத்தில்
உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக, பள்ளியின் அருகே இருந்த பழமை வாய்ந்த அரச மரம் பள்ளியின் மீது விழுந்தது. இதனால், ஓடுகள் உடைந்து விழுந்தன. அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல, மதுரை மாவட்டம் , மேலூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தால் 8,9,10 ஆகிய வகுப்புகள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இன்று அரையாண்டு தேர்வு என்பதால், மதியம் நடைபெற உள்ள தேர்வுக்காக இன்று காலை 9 ஆம் வகுப்பு மாணவ மாணவியர் 42 பேர் மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்று வீசியதால், அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மாணவர்கள் மீது விழுந்துள்ளது.
மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த 17 மாணவ- மாணவியருக்குக் காயம் ஏற்பட்டது. உடனடியாக தலைமையாசிரியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அருகிலிருந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாணவ- மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த இரண்டு சம்பவங்களையும் சுட்டிக்காட்டி, தமிழக அரசை விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "திருவள்ளூர் மாவட்டம் சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளிக் கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து, ஐந்து குழந்தைகள், தலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளிக் கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து, ஐந்து குழந்தைகள், தலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். முன்னதாக, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரசு…
— K.Annamalai (@annamalai_k) December 14, 2023
முன்னதாக, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவ மாணவியர் மீது, மரம் வேரோடு சரிந்து விழுந்ததில், 17 மாணவ மாணவியர் காயமடைந்தனர் என்ற செய்தியும் காண நேர்ந்தது. அனைவரும் விரைந்து நலம் பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழகம் முழுவதும் உள்ள 10,000 சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. பல முறை அவை குறித்துக் கேள்வி எழுப்பியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எந்த விளக்கமும் அளித்ததாகத் தெரியவில்லை.
குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? இந்த 10,000 பள்ளிக் கட்டிடங்கள் எவை எவை, இவற்றில் எத்தனை பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, சிதிலமைடைந்த பள்ளிக் கட்டிடங்களுக்குப் பதிலாக, மாற்று இடங்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனவா என்பதை, பொதுமக்களுக்குத் தெரிவிக்க திமுக அரசு கடமைப்பட்டுள்ளது.
உடனடியாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்க, குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்துச் செயல்பட வேண்டும் என்றும், இவை குறித்த விவரங்களை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications