சென்னையில் அதிகரிக்கும் இன்புளூயன்சா வைரஸ் பரவல்.. உடனே கட்டுப்படுத்துங்கள்.. பாஜக அண்ணாமலை
சென்னை: தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலால் குழந்தைகள், பெரியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் மட்டும் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை.

அரசு மருத்துவமனை
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஃப்ளூ காய்ச்சலுக்கான மருந்துகள் இருப்பு உள்ளன. எந்த மருத்துவமனையிலாவது மருந்துகள் இல்லை என்றால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

சென்னை மருத்துவமனைகள்
சென்னையில் பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவர்களின் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
@arivalayam அரசு எடுக்க வேண்டும்.

எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல்
H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். நோய் பரவலைத் தடுப்பதற்கு மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டுமென்று @BJP4TamilNadu சார்பாகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சாதாரண சளி
இந்த ஃப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள் யாதெனில் மூக்கில் சளி ஒழுகுதல், உடல் சோர்வு, குமட்டல், உடல் வலி, தலைவலி உள்ளிட்டவை ஏற்படும். சாதாரண சளி வந்தால் ஏற்படுத்தும் பாதிப்பைவிட ஃப்ளூ காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பு தீவிரமாக இருக்கும். எனவே மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications