அண்ணாமலையின் பாஜக தலைவர் பதவி ஓவர்.. 4 ஆண்டுகளில் செய்த சாதனைகள், சிக்கிய சர்ச்சைகள்!
சென்னை: தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடைபெற உள்ளார். மாநில பாஜக தலைவருக்கான தேர்தலில் நயினார் நாகேந்திரன் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ள நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் அண்ணாமலை பாஜகவில் சாதித்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழக பாஜகவின் அடுத்தத் தலைவர் யார் என்ற கேள்வி கடந்த ஒரு மாதமாக விவாதிக்கப்பட்டு வந்தது. அடுத்த மாநிலத் தலைவருக்கான பந்தயத்தில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆகியோர் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி சென்று வந்த அண்ணாமலை, பாஜகவில் சாதாரண தொண்டனாக பணியாற்றவும் தயார் என்று அறிவித்தார்.

புதிய தலைவர் நயினார் நாகேந்திரன்
இதன்பின் அடுத்த 2 நாட்களில், பாஜக மாநிலத் தலைவருக்கான பந்தயத்தில் அண்ணாமலை இல்லை என்றும் வெளிப்படையாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று மாநிலத் தலைவருக்கான தேர்தலில் நயினார் நாகேந்திரன் விருப்ப மனு வழங்கிய நிலையில், ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.
அண்ணாமலை தோல்வி
2021ஆம் ஆண்டு மாநில பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்ட பின், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே அண்ணாமலை பாஜகவில் இணைந்திருந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார் அண்ணாமலை.
பாஜக மாநில தலைவர்
அதில் திமுக வேட்பாளர் இளங்கோவிடம் சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதன்பின் எல்.முருகனுக்கு இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்ட, உடனடியாக அண்ணாமலை மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். 2021ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி அண்ணாமலை மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார்.
4 ஆண்டுகளில் என்ன செய்தார்?
சுமார் 4 ஆண்டுகள் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டுள்ளார். இவரது தலைமையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாஜகவோ அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகளோ வெற்றிபெறவில்லை. அதேபோல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து, அதிமுக உடனான கூட்டணி பிரியவும் காரணமாக அமைந்தார்.
திமுகவுக்கு எதிரான அரசியல்
அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை தலைமையில் சந்தித்த தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததாக கூறப்பட்டாலும், அந்த கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிட்டதால் நேர்ந்த விளைவாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் கடந்த 4 ஆண்டுகளில் திமுகவை எதிர்த்து அண்ணாமலை செய்து வந்த அரசியல் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. என் மண், என் மக்கள் யாத்திரை தொடர்பாக பாஜக ஊதி பெரிதாக காட்டினாலும், அதற்கான பலன் என்ன என்பது பாஜகவினருக்கு மட்டுமே வெளிச்சம்.
சர்ச்சைகள்
ஆனால் அண்ணாமலையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ரஃபேல் வாட்ச், விமானத்தின் அவசர கதவை திறந்த விவகாரம், சாட்டையால் அடித்து கொண்ட விவகாரம், செருப்பு அணிய மாட்டேன் என்று சவால்விட்டு மாட்டிய விவகாரம் எதிர்க்கட்சிகளால் கிண்டலுக்கு உள்ளானது. அதேபோல் எந்த தலைவருடன் அண்ணாமலை நட்பு பாராட்டாமல் இருந்தது அவருக்கான பின்னடைவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications