பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்க டெல்லி செல்கிறார் அண்ணாமலை! அடுத்தக்கட்ட நகர்வு பற்றி முக்கிய ஆலோசனை
சென்னை: அதிமுக -பாஜக கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், பாஜக மேலிடத் தலைவர்களை சந்திப்பதற்காக நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் அண்ணாமலை.
பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றியும், யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பது பற்றியும் அண்ணாமலை நாளைய தினம் டெல்லியில் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார். அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோரின் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப சென்னையில் 3ஆம் தேதி நடைபெறும் பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசுவார் எனத் தெரிகிறது.

அண்ணாமலையின் நாளைய டெல்லி பயணம் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நாளைய தினம் டெல்லியில் எடுக்கப்படும் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிய தமிழக பாஜக நிர்வாகிகள் இப்போதே ஆர்வமாக உள்ளனர். டெல்லி பயணத்தின் போது தனது என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சி குறித்தும் அதற்கு கிடைத்துள்ள வரவேற்பு பற்றியும் பாஜக மேலிடத் தலைவர்களிடம் அண்ணாமலை எடுத்துக் கூறுவார் எனத் தெரிகிறது.
அண்ணாமலையுடன் தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலரும் டெல்லி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக, பாமக, உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைப்பது பற்றியும் நாளை டெல்லியில் ஆலோசனைகள் நடைபெறலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றன.
பாஜக பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்னவெல்லாம் பேசினார்கள், எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பது பற்றியும் மேலிடத் தலைவர்களிடம் அண்ணாமலை முறையிடுவார் எனத் தெரிகிறது. இதனிடையே பாரிவேந்தர், ஏசி சண்முகம், கிருஷ்ணசாமி, உள்ளிட்டோர் அதிமுகவையும், பாஜகவையும் மீண்டும் கூட்டணி சேர வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
அவர்கள் பங்குக்கு டெல்லியில் இதற்கான வேலைகளை கவனித்து வருகின்றனர். அக்டோபர் 3ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பாஜக மாவட்ட மாற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை என்ன பேசப்போகிறார், என்ன தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது.
அண்ணாமலையின் டெல்லி பயணத்தை அதிமுக தரப்பு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications