Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'உங்கள் நோக்கம் தெளிவாக புரிந்துவிட்டது'.. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவுக்கு அண்ணாமலை ஆவேச பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அறிக்கைக்கு வந்த எதிர்ப்புகளைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், நீதிபதி சந்துரு, திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக, புதிய அவதாரம் எடுத்துள்ளார். திமுகவின் கொள்கைகளை அறிக்கையாகக் கொடுத்தால், பொதுமக்களிடையே எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வரும் என்பதை, அவர் இனியாவது உணர வேண்டும் என அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நாங்குநேரியில் மாணவன் சின்னதுரையை, வீடு புகுந்த வேறு சாதியைச் சேர்ந்த சக பள்ளி மாணவர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். இந்தத் தாக்குதலால் படுகாயம் அடைந்த சின்னதுரை உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அரசு அவருக்கு உயர் சிகிச்சை அளித்தது. இதனால் சிறுவன் மீண்டு வந்தார்.

Annamalai DMK

இந்தக் கொடூர சம்பவத்தை அடுத்து முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே நிலவும் சாதிய வேறுபாடுகளைக் களைவதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பது பற்றி ஆய்வு செய்து அரசுக்கு முன்னாள் நீதிபதி சந்துருவும் அறிக்கை அளித்தார்.

அந்த அறிக்கையை எதிர்த்து பேசிய அண்ணாமலை, "பள்ளிக்கூடங்களில் ஜாதிக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது உண்மைதான் . ஆனால் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கையை ஏற்க முடியாது. அதில் ஏற்றுக் கொள்ள முடியாத பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அறிக்கையில் உள்ள விசயங்களைச் செயல்படுத்தினால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேலும் ஜாதி ரீதியிலான பிரச்சினைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன" என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, "தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஒரு நபர் குழுவை அமைத்து, அந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தது. நான் அதற்காக ஒருசில மாதங்கள் கள ஆய்வு செய்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஒரு அறிக்கையை ஒப்படைத்திருந்தேன். அந்த அறிக்கை முதல்வரைத் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. அவருக்கு மட்டும்தான் அதில் என்ன இருக்கிறது என்பது தெரியும்.

ஆனால், அறிக்கையில் என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளது என்பது பற்றி ஊடகங்கள் சில ஊகத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டிருந்தன.இந்த அறிக்கையைப் படிக்காமலே அதை நிராகரித்துள்ளார் ஒரு அரசியல் கட்சித் தலைவர் (அண்ணாமலை). இதற்கே அவர் 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார். நீதிபதி சந்துரு தனது சொந்தக் கருத்தை எல்லாம் அதில் சொல்லி இருக்கிறார் என்கிறார் அவர். 650 பக்கமும் என் சொந்த கருத்தை அப்படிச் சொல்ல முடியுமா? அறிக்கையில் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்றால், ஆதாரம் தர வேண்டும். சான்று கொடுக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக எழுத முடியாது.

அந்தக் கட்சியின் சார்பில் கடந்த வாரம் செயற்குழு நடந்தது. அதில் என் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். இவர்களுக்கு அறிக்கை மீது பயம் இல்லை. மக்கள் படித்து முன்னேறிவிடக்கூடாது. அப்படி முன்னேறிவிட்டால், அவர்களை வைத்து அரசியல் செய்ய முடியாது. மக்களுக்கு உண்மை தெரிந்துவிடும். உண்மை தெரியக்கூடாது என்றால் அவர்கள் படிக்கக் கூடாது. அந்தப் பயத்தில் இப்படிப் பேசுகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, "சந்துரு அவர்கள் குறிப்பிட்ட, எரிந்து போன யாழ்ப்பாணம் நூலகத்தில் இந்தியப் புத்தகங்களுக்கான பிரத்யேகப் பகுதியை திறந்து வைத்ததும், அதற்கு 16,000 புத்தகங்களை வழங்கிட ஏற்பாடுகள் செய்ததும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசுதான். அதே யாழ்ப்பாணத்தில், சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், கலாச்சார மையம் அமைத்ததும், பிரதமர் மோடி அவர்கள் அரசுதான்.

தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் திமுக அரசின் குழுவில் இருந்து கொண்டு, நூலகம், அறநெறி, கலாச்சாரம் குறித்தெல்லாம் சந்துரு, எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம் என்று முதலில் கேட்டுக் கொள்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஒரு நபர் குழு, இதர குழு எனப் பல குழுக்களில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களால், அவர் அளித்திருக்கும் அறிக்கைக்கு வந்திருக்கும் எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.

சந்துரு அவர்களே. இங்கே எதிர்ப்பு தெரிவித்திருப்பது, தமிழகம் முழுவதும் மாணவ சமுதாயத்தைப் பாதிக்கும்படியான, அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கைக்குத்தானே தவிர, நீங்கள் எழுதிய தொடர்கதைக்கோ, நாவலுக்கோ அல்ல. அதற்குப் பதிலளிக்க வேண்டியது தமிழக அரசே தவிர, சந்துரு என்ற தனிநபர் அல்ல. திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் ஏன் மாணவ சமுதாயத்தினரிடையே இது போன்ற ஜாதியப் பிரிவினைகள் பெருமளவில் இல்லை என்பதுதான் சந்துரு அறிக்கையின் முதல் கேள்வியாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அந்தக் கேள்வியை முன்வைக்க, பாரபட்சமில்லாத நபராக இருந்திருக்க வேண்டும். அறிக்கையின் பரிந்துரை எண் 19 (c) யில், காவிமயமாக்குதல் (saffronization) என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருக்கும்போதே, உங்கள் அரசியல் நிலைப்பாடும், இந்த அறிக்கையின் நோக்கமும் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

சந்துரு அவர்களே. அறிக்கை அளித்ததோடு உங்கள் பணி நிறைவடைந்தது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஜனநாயகத்தில், அரசின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளின் பணி. திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.

அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், சந்துரு அவர்கள், அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். அதை விடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அண்ணாமலை அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+