நிர்மலா சீதாராமன் மீட்டிங்கை கவனிச்சீங்களா? எச் ராஜா - தமிழிசை ஆப்சென்ட்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக எச் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தான் எச் ராஜா மற்றும் தமிழிசை சவுந்தரராஜன், 2 பேரும் இல்லாமல் சென்னையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜகவினருடன் ஆலோசனை நடத்தியது பேசுபொருளாகி உள்ளது.
பாஜகவின் தமிழக தலைவராக அண்ணாமலை இருக்கிறார். இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு 3 மாத கால பயணமாக சென்றுள்ளார். அரசியல் மேற்படிப்புக்காக அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாதம் அண்ணாமலை அரசியல் படித்து வருகிறார்.

இதனால் அண்ணாமலை இல்லாத நேரத்தில் தமிழக பாஜகவை வழிநடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்தது. அதுமட்டுமின்றி அண்ணாமலைக்கு பதில் புதிதாக மாநில தலைவர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் பாஜக மேலிடம் மாற்று முடிவை கையில் எடுத்தது.
அண்ணாமலை லண்டன் பயணத்தை முடித்து வரும்வரை தமிழக பாஜகவை வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவரான எச் ராஜா தலைமையில் இந்த ஒருங்கிணைப்பு குழு செயல்பட்டு வருகிறது. குழுவில் சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ்ஆர்சேகர் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த குழுவுக்கு தான் கட்சி கூட்டங்களை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமையை பாஜக மேலிடம் வழங்கி உள்ளது. இத்தகைய சூழலில் அண்ணாமலை இல்லாத சூழலில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா, மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டவர்கள் இல்லாமல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனையில் பாஜகவில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், எஸ்ஜி சூர்யா, துணை தலைவர் பால் கனகராஜ், வினோஜ் பி செல்வம் ஆனந்த பிரியா, டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தமிழக பாஜகவில் 2ம் கட்ட தலைவர்களாக இவர்கள் அறியப்பட்டு வரும் நிலையில் தான் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார்.
காலை வேளையில் ‛பிரேக்பாஸ்ட்' மீட்டிங்காக இது நடந்தது. அப்போது நிர்மலா சீதாராமன் பாஜகவின் தற்போதைய நிலை, நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றி விரிவாக கேட்டறிந்துள்ளார். அதேபோல் தற்போது பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை பணி என்பது நடந்து வருகிறது. இதுபற்றி நிர்மலா சீதாராமன் கேட்டறிந்து சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
இருப்பினும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எச் ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டவர்கள் இல்லாமல் போனது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரித்தபோது நிர்மலா சீதாராமன் ‛பிரேக்பாஸ்ட்' மீட்டிங் நடத்தினார். எச் ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சென்னையில் இல்லாத நிலையில் அவர்கள் பங்கேற்கவில்லை என விளக்கமளித்து விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications