அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியில்லை? ஏன் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்
சென்னை: தமிகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவுடன், பாஜக மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் தான் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலுக்காக எதிர்க்கட்சியான அதிமுகவுடன், பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை எடப்பாடிபழனிச்சாமி - அமித்ஷா ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

இந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் முன்னணி தலைவர்கள் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுகவுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒதுக்கப்படும் இடங்களை பொறுத்து பாஜக பிரபலங்கள் களமிறங்க உள்ளன.
இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பில்லை என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை கடந்த 2021ம் ஆண்டு மாநில தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் பதவி விலகினார். அதிமுக தலைவர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையே உரசல் போக்கு நீடித்து வந்தது.
இதற்கிடையே சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைத்தது. அண்ணாமலை தலைவராக நீடித்தால் கூட்டணிக்கு பிரச்சனை வரலாம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநில பாஜக தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையே தான் அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் இதுதொடர்பான அறிவிப்பை பாஜக மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.
அதாவது பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அந்த நியமனத்தை தொடர்ந்து அண்ணாமலை தொடர்பான அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் அண்ணாமலை அடுத்த ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்ணாமலை கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் முதல் முதலாக களமிறங்கினார். ஆனால் அந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர் இளங்கோ 93,369 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 68,553 ஓட்டுகள் மட்டுமே பெற்று 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதன்பிறகு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாத நிலையில் இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கணபதி பி ராஜ்குமார் 5,68,200 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,32 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். அண்ணாமலை 1 லட்சத்து 18 ஆயிரத்து 68 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications