டெய்சி சரணை மிரட்டிய ஆடியோ?.. பாஜக நிகழ்ச்சிகளில் சூர்யா சிவா பங்கேற்க தடை.. அண்ணாமலை அதிரடி
சென்னை: பாஜக நிகழ்ச்சிகளில் சூர்யா சிவா பங்கேற்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும் ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது.
இந்த சம்பவத்தை விசாரித்து கட்சித் தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனகசபாபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன அசிங்கம் இது! வெளியான திருச்சி சூர்யா பெயரிலான ஆடியோ! யார் அந்த பெண்? கொதித்து எழுந்த காயத்ரி!
ஒழுங்கு நடவடிக்கை
ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இவ்வாறு தமிழக பாஜக தலைவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெய்சி சரண் மற்றும் சூர்யா சிவா இடையே மோதல் ஏற்பட்டதாக ஒரு ஆடியோ வெளியானதுதான் இந்த நடவடிக்கைக்கு காரணம்.
டெய்சி சரண்
டெய்சி சரண் தனது துறைக்கு கீழே கமிட்டி உருவாக்குவதற்கு திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அது போல் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. டெய்சியிடம் சூர்யா பேசிய ஆடியோவில் அவரை ஒருமையில் பேசியுள்ளார்.
ஒருமையில் பேசினாரா சூர்யா சிவா
அதில் "நீ அண்ணாமலைகிட்ட போ, மோடி, அமித்ஷா கிட்ட கூட போ, உன்னால என்னை ஒன்னுமே செய்ய முடியாது. உன்னை தீர்த்துவிடுவேன்" என கொலை மிரட்டல் விடுத்து சூர்யா சிவா பேசுவது போல் தெரிகிறது. இந்த ஆடியோ வெளியானதற்கு சூர்யா சிவா எந்த மறுப்பையும் இதுவரை தரவில்லை. இந்த விவகாரம் பெரிதான நிலையில் அண்ணாமலை, சூர்யா சிவா மீது ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சூர்யா சிவாவின் மனைவி ஒரு பெண்ணுக்கு சொந்தமான கட்டடத்தை குத்தகைக்கு வாங்கியதாகவும் குத்தகை காலம் முடிந்தும் அந்த கட்டடத்தை காலி செய்ய மறுப்பதாகவும் அதற்கு சூர்யா சிவா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திருச்சி மாநகர ஆணையரிடம் பெண் ஒருவர் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காயத்ரி ரகுராம்
அது போல் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவிலிருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவர் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இன்று ஒரே நாளில் சூர்யா சிவா, காயத்ரி ரகுராம் ஆகியோர் மீது தமிழக பாஜகவின் நடவடிக்கை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.