“போங்க போங்க”னு விரட்டி அடிக்காம.. “வாங்க வாங்க”னு சொல்லிப்பாருங்க! எடப்பாடிக்கு வேலுமணி வேண்டுகோள்!
சென்னை: அதிமுகவில் இருந்து பதவி ஆசையில் சில முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு குரல் கொடுத்து வருகிறார்கள் என காட்டமான அறிக்கையை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் இப்போது அழைத்தால் கூட தாங்கள் பேச தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார் எஸ்பி வேலுமணி.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் மட்டும் இருந்த அதிமுக தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்திருப்பது அந்த கட்சி நிர்வாகிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், சிவி சண்முகம் - எஸ் பி வேலுமணி தரப்புக்கும் மோதல் வெடித்தது. இதை அடுத்து தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என சிவி சண்முகம் தரப்பு சொன்னதை எடப்பாடி பழனிச்சாமி கேட்கவில்லை.
அதிமுக மோதல்
இதை அடுத்து சட்டமன்றத்தில் மோதல் வெளிப்படையாக வெடித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவை மீறி தமிழக வெற்றி கழகத்திற்கு 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் 22 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் பதவி ஆசையில் சில முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு குரல் கொடுப்பதாக காட்டமான அறிக்கையை ஒன்றை வெளியிட்டு இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதில் பதவி ஆசை பிடித்து இழிவு செயல்களில் ஈடுபடுவோரை விரட்டியடிப்போம், இயக்கத்துக்காக தான் மேற்கொண்ட பிரச்சாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசி இருந்தார்.
எஸ்பி வேலுமணி
இந்த நிலையில் தற்போது அழைத்தாலும் பேச தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார் எஸ்பி வேலுமணி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம்.
அதிமுக
ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல "நான் மட்டுமே எல்லாம்" என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம்.
த.வெ.க. அரசு
மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி
இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். "எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்" என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்- "போங்க போங்க" என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், "வாங்க வாங்க" என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்...!! எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications