சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர வேண்டும்! ஆளுநர் ரவியின் முடிவை எதிர்க்கும் அண்ணாமலை?
சென்னை: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்றும் ஒப்புதல் அளிக்காதது ஏன் என்பது பற்றி ஆளுநர் மாளிகை தான் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் ஒப்புதல் கோப்பில் ஆளுநர் கையெழுத்திடாததற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அண்ணாமலை தனது பேட்டியின் மூலம் உணர்த்தியுள்ளார். சங்கரய்யாவை பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடியவர் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.

சங்கரய்யாவுடன் வேறு யாருக்கேனும் டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைத்து பட்டியல் அனுப்பப்பட்டதா என்ற விவரம் தனக்குத் தெரியாது என ஆளுநர் மாளிகையை கோர்த்துவிட்டுள்ளார். இதனிடையே தமிழ்நாட்டில் இன்னும் சாதிய வன்கொடுமைகள் நிகழ்வது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் சாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிக்கையொன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார். அதன்படி, சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு தீர்மானம் நிறைவேற்றி அதற்கு அனுமதி வழங்க கோரி ஆளுநருக்கு அனுப்பியும் வைத்துள்ளது. ஆனால் ஆளுநர் ரவி அதற்கு இன்னும் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த முடிவை பாஜகவே ரசிக்கவில்லை என்பதை தான் அண்ணாமலை சூசகமாக தனது பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் அரசியல் தலைவருமான சங்கரய்யா நூற்றாண்டுகளை கடந்து வாழக்கூடிய வரலாறாக திகழ்பவர். சங்கரய்யாவை ஆளுநர் அவமதிப்பு செய்துவிட்டதாக விமர்சனக்கணைகள் வீசப்படும் நிலையில், ஆளுநர் முடிவுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை போல் அண்ணாமலையின் பேட்டி அமைந்துள்ளது.
சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற காரணத்தையாவது அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் பலரும் ஆர்வமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications