முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ‘டீம்’ அனுப்பும் அண்ணாமலை.. ரிப்போர்ட் ரெடி.. தேதியும் குறிச்சாச்சாமே!
சென்னை : அண்ணாமலை அமைத்த பாஜக குழுவினர், வரும் ஜூன் 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து முக்கிய அறிக்கையை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும், கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும், டாஸ்மாக் கடைகளை குறைத்து அதே வருமானத்தை வேறு வழிகளில் கொண்டு வருவது எப்படி என்பது குறித்து பாஜக குழுவினர் ஒரு அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

கடந்த மே 21ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து கள்ள சாராய உயிரிழப்புகள் குறித்தும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி புகார் மனு அளித்தார்.
இதுதொடர்பாக அடுத்த 15 நாட்களுக்குள் தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கை அளிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
எப்படி டாஸ்மாக்கை குறைத்து அதே வருமானத்தை வேறு வழிகளில் கொண்டு வருவது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்க இருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம் என அண்ணாமலை அப்போது அறிவித்தார்.
இந்நிலையில் ஜூன் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு பாஜக குழு சந்தித்து அறிக்கை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழுவில் கரு.நாகராஜன், விபி துரைசாமி, பொன்.பாலகணபதி, கார்த்தியாயினி, உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை தடுப்பது குறித்தும், கள்ளச்சாராய விற்பனைக்கு காரணமானவர்கள் குறித்த விவரங்கள் பட்டியலையும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பனை, தென்னை கள் உற்பத்தியை அதிகரித்தால் டாஸ்மாக்கை விட அதிக லாபம் பெற முடியும் என்பதை வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலுன், டாஸ்மாக் மதுபானங்களில் முறைகேடு மற்றும் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தான் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் அம்சங்களும் அந்த அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications