வார்த்தையை விட்ட எடப்பாடி..அட்டாக்கை ஆரம்பித்த அதிமுக! ‘அதை’ மட்டும் செய்ய மாட்டேன்.. அண்ணாமலை பளீர்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரைக்குறைவாக விமர்சித்ததாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களை அதிமுகவினர் நடத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி குறித்து தான் தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெறப் போவதில்லை என திட்டவட்டமாக கூறி இருக்கிறார் அண்ணாமலை.
மக்களவை தேர்தலுக்கு அதிமுக கூட்டணி உடைந்த நிலையில், அண்ணாமலை பேச்சின் காரணமாகவே அதிமுக - பாஜக கூட்டணி பிளவு ஏற்பட்டதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். இடை இடையே அதிமுக - பாஜக இடையே வார்த்தைப் போர் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார். அந்த கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவழ்ந்து, காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி, ஒரு தன்மானம் மிக்க ஒரு விவசாயினுடைய மகனை, பச்சை மையால் பத்து வருஷம் கையெழுத்து போட்டும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத இந்த அண்ணாமலையை பற்றி சொல்வதற்கு எடப்பாடி எனும் தற்குறிக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என கொந்தளித்துப் பேசினார்.
அண்ணாமலை இப்படி பேசியதற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், தொண்டர்கள் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து வருகின்றனர். நேற்று நெல்லை, தென்காசி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்த அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களிலும், ஆன்லைன் மூலமாகவும் அதிமுகவினர் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தான் தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெறப் போவதில்லை என திட்டவட்டமாக கூறி இருக்கிறார் அண்ணாமலை. சென்னையில் நேற்று புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,"ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்த வகையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாஜகவின் முதல் உறுப்பினராக மீண்டும் சேர்கிறார். இரண்டாம் தேதி தமிழக பாஜகவில் எச். ராஜா முதல் உறுப்பினராக சேர இருக்கிறார். அதற்கு பிறகு தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
எனது மேற்படிப்புக்காக பாஜக தலைவர்கள் ஆதரவுடன் லண்டன் செல்கிறேன். லண்டனில் இருந்தாலும் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவேன். நான் கையை காலை பிடித்து பதவிக்கு வந்தேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னார். அதற்கு பதில் கொடுக்க வேண்டியது எனது கடமை. பாஜக மாநில தலைவராக அந்த இருக்கைக்கு ஒரு மரியாதை இருக்கிறது. அதனால் தான் அவருக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. எனது கருத்தை நான் ஒருபோதும் வாபஸ் பெற போவதில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications