தமிழ்நாடு வன்முறை மாநிலமாகிவிட்டது.. கள்ளச்சாராயம் ஆறு போல ஓடுகிறது.. செயற்குழுவில் அண்ணாமலை ஆவேசம்!
சென்னை: தமிழகத்தில் பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது, அரசை எதிர்த்து கேள்வி கேட்டால், அவர்களுக்கு கைது மட்டுமே பரிசாக கிடைக்கிறது என தமிழக பாஜக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னையை அடுத்த வானகரத்தில் பாஜக மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

மேலும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 4000க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளும் இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக பாஜக செயற்குழு கூட்டம்.. அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை!
இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் ஒரு சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது போல, திமுக அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை இதுபோல் வன்முறை மாநிலமாக இதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளாக திமுக அரசின் பிடியில் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது.
கள்ளச் சாராயம் ஆறு போல் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் திருவெண்ணெய்நல்லூரில் ஒருவர் கள்ளச் சாராயத்துக்கு பலியானார். அதற்கு முன்பு திருப்பூர், கோவை, உடுமலைப்பேட்டையில் 5 பேர் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்பாக, கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் முழுவதுமாக தங்களுடைய கண் பார்வையை இழந்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, மரக்காணம், விழுப்புரம், செங்கல்பட்டு பகுதியில் 22 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குக் கூட நாதியில்லை.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டு உள்ளார். கட்சி தலைவர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் சாமானிய மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அதுபற்றி கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லை. அதையும் மீறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களை கூலிப்படை வைத்து வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது.
எனவே, தவறுகளைக் கேட்பதற்கு சாமானிய மனிதன் அஞ்சுகிறான். அரசை எதிர்த்து சாமானிய மனிதன் கேள்வி கேட்டால், அவர்களுக்கு கைது மட்டுமே பரிசாக கிடைக்கிறது. பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. எனவே தான் பாஜகவின் குரல், இந்த நேரத்தில், இன்னும் கம்பீரமாக, வேகமாக, சாமானிய மனிதர்களுக்காக பேச வேண்டியிருக்கிறது. சாமானியர்களின் குரலை திமுக அரசு நசுக்கிக் கொண்டிருக்கும்போது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீய சக்தியின் ஆட்சி தூக்கி எறியப்படும்வரை, பாஜகவின் குரல் ஒரு சாமானிய மனிதனின் குரலாக ஒலிக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications