நீட் தேர்வு தமிழக மாணவர்களை ரொம்பவே ஈர்த்துள்ளதாம்.. அண்ணாமலை சொல்வதை பாருங்க!
சென்னை: நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது எனக் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதன்படி 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று நடக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகின்றனர். இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. ஜூன் மாதம் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையிலும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. நீட் தேர்வு தொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்துள்ளன. இந்நிலையில், நீட் தேர்வு தமிழக மாணவர்களை ஈர்த்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று நீட் தேர்வு.. கடும் கட்டுப்பாடுகள் விதித்த NTA! ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்துறாங்களாமே!
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “இன்றைய தினம், நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்கும் நீட் தேர்வு, தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது என்பது, ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது.
தமிழகத்தில், மருத்துவக் கல்வி இடங்களை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்தியுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கையும் நிச்சயம் நிறைவேற்றுவார். வருங்காலத்தில் நீட் தேர்வு மூலம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது உறுதி.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications