ஆட்சியே 6 மாசத்துல முடிய போகுது! எதுக்கு இந்த நாடகம்? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
சென்னை: நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் ஆட்சி முடியும் நேரத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: ஈரோடு மாவட்டம்,அந்தியூர் சட்டசபை தொகுதி பர்கூர் மலையில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான இங்கு, குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி ஆகிய மலை கிராமங்களுக்கு, நேரடியாகச் செல்ல பாதை இல்லாததால், கர்நாடக, தமிழக வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள கர்கேகண்டி நீரோடை பள்ளம் வழியாக, 20 கிலோ மீட்டர் பயணித்தே இந்த கிராமங்களுக்குச் செல்ல முடியும்.

பல ஆண்டுகளாக, பொதுமக்கள் சிரமமின்றி கடந்து கிராம பகுதிக்குச் செல்ல, இந்தப் பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஐந்து ஆண்டுகளில், சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என, ரூ.78,000 கோடி செலவிட்டுள்ளதாக, நிதிநிலை அறிக்கையில் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் பல கிராமங்களில், இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை.
மத்திய அரசு வழங்கும் கிராம சாலைகள் திட்டத்துக்கான நிதியும், எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கு வீணடித்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சாலை வசதிகளைக் கூட ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது வெட்கக்கேடு. நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்?
ஒவ்வொரு மழைக்காலத்திலும், இது போன்ற கிராம மக்கள் அவதிப்படுவது முதல்வருக்கு தெரியாதா? சாலைகள் அமைத்தோம் என்று கணக்கு காட்டியிருக்கும் ரூ.78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், போர்க்கால அடிப்படையில், சாலை வசதிகளற்ற மலைக்கிராமங்களுக்கு, உடனடியாகச் சாலைகள், உயர்மட்டப் பாலங்கள் அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுத் துறை சேவைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த முகாம் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
மகளிர் உரிமைத் தொகை, குடிநீர் இணைப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ், வருமானம், இருப்பிடச் சான்றிதழ், வீட்டு மனை பட்டா, மின் கட்டண பெயர் மாற்றம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களை பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த முகாமில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications