DMK Files: அக்.13ல் திமுக எம்பி டி.ஆர்.பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்யும் அண்ணாமலை
சென்னை: DMK Files தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கில் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி, திமுக எம்பி டி.ஆர்.பாலுவை, அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்கிறார் என பாஜக தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்த அவதூறு வழக்கு தொடர்பாக திமுக எம்பி டி.ஆர்.பாலுவிடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று குறுக்கு விசாரணை நடந்தது. குறுக்கு விசாரணை குறித்து பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் பேட்டி அளித்த போது அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்கிறார் என்ற தகவலை தெரிவித்திருந்தார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த போது கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அதாவது தமிழ்ப்புத்தாண்டு அன்று DMK Files என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை அவர் வெளியிட்டிருந்தார்.
அதில் டி.ஆர்.பாலு, அவரது மகன் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் சொத்து பட்டியலும் இருந்தது. அதில் டி.ஆர்.பாலுவுக்கு 21 நிறுவனங்கள் இருப்பதாகவும் அவருக்கு ரூ 10 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாகவும் அந்த பட்டியலில் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.
இது போல் மூத்த அமைச்சர்கள், எம்பிக்கள் என பலருடைய சொத்து கணக்கு என கூறி சில விஷயங்களை அவர் வெளியிட்டிருந்தார். இதையடுத்து அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாலு அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டை 17ஆவது பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு நேற்று டி.ஆர்.பாலு ஆஜரானார். அப்போது அண்ணாமலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பால் கனகராஜ், பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்தார்.
இந்த விசாரணை முடிந்ததும் பால் கனகராஜ் பேட்டி அளிக்கையில், தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை DMK Files என்ற பட்டியலை வெளியிட்டிருந்தார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன் வைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து நேற்று காலை 11.30 மணி முதல் மதியம் 2.15 மணி வரை டி.ஆர்.பாலுவிடம் விசாரணை செய்யப்பட்டது.
இந்த நிலையில் அப்போது நேரமில்லாததால் இந்த குறுக்கு விசாரணை வரும் அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. "அன்றைய தினம் டி.ஆர். பாலுவிடம் தான் குறுக்கு விசாரணை செய்யலாமா" என அண்ணாமலை என்னிடம் கேட்டிருந்தார்.
நானும் அதற்கு சட்டத்தில் இடம் உண்டு என்பதால் விசாரணை செய்யலாம் என்றேன். எனவே அவரும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராவார். இவ்வாறு பால் கனகராஜ் தெரிவித்திருந்தார். அது போல் வழக்கில் வழக்கறிஞர்கள் இல்லாத போது தானே வாதாடவும் சட்டத்தில் இடமிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications