சிபிஐ வசம் கள்ளக்குறிச்சி சாராய வழக்கு! திமுக அரசுக்கு எச்சரிக்கை மணி.. பாஜக அண்ணாமலை சொன்ன பாய்ண்ட்
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 66 பலியாகினர். தமிழகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுதிதிய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கேபாலு, தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, அ.தி.மு.க். முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன், பா.ஜ.க வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை நிலையில் இன்று நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், சமுதாயத்தில் எந்த மாதிரியான பிரச்சினைகள், தீங்குகள் மதுவால் ஏற்படும் என்பதற்கு கள்ளக்குறிச்சி கள்ளசரய மரண சம்பவங்கள் ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது. காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை.
மாநில போலிசார் கண்டும் காணமாலும் இருந்துள்ளதை இச்சம்பவம் தெளிவாக்கிறது. அதேவேளையில் காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என குறிப்பிட்டு, சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் வழங்க வேண்டும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என தீர்ப்பு வழங்கினர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால், கள்ளக்குறிச்சியில் 68 உயிர்கள் கள்ளச்சாராயத்திற்குப் பலியான வழக்கு தொடர்பாக, தமிழக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்த வழக்கில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசின் காவல்துறைக்குத் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மாவட்ட காவல்துறை, கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான், இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், கள்ளச்சாராயம் தொடர்பாக, திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் மாண்புமிகு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கள்ளச் சாராய விற்பனையையும் கண்டு கொள்ளாமல், வழக்கு விசாரணையையும் மெத்தனப் பொக்கில் கையாண்டு, உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் போக்கில் திமுக அரசு செயல்பட்டு வந்திருப்பது, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்குக் கொட்டு வைத்திருக்கும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 68 உயிர்கள் பலியானதை மூடி மறைத்து, வழக்கைத் திசைதிருப்ப முயன்ற திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications