வங்க கடலில் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
சென்னை: வங்க கடலில் வரும் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. பின்னர் அது தீவிர புயலாகவும் மாறியது. ஒருகட்டத்தில் தீவிர புயல், வலு குறைந்து புயலாக மாறியது.

மாண்டஸ் புயல், மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. பின்னர் வலுகுறைந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையாகி அரபிக் கடலுக்கு சென்றுவிட்டது. மாண்டஸ் புயலால் மிகப் பெரும் சேதங்கள் ஏற்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாண்டஸ் புயல் தாக்கத்தால் இன்னமும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் உள் மாவட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னையிலும் பல இடங்களிலும் மழை பெய்திருந்தது.
இந்த நிலையில் வங்க கடலில் வரும் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதும் அது புயலாக உருமாறுமா? என்பது தற்போது கணிக்க இயலாது எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 16-ந் தேதி வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவும் மாறும்; அது இலங்கையை ஒட்டிய தமிழக மாவட்டங்களின் கரையை கடக்கும்; கரையை கடந்த பின்னர் உள்மாவட்டங்கள் வழியாக அரபிக் கடல் செல்லும்; அப்போது உள் மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என்பது வானிலை தொடர்பான ஆய்வாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications