அடாது மழை பெய்தாலும்..விடாது சீமானின் இந்தி எதிர்ப்பு பேரணி..குடையோடு பங்கேற்ற நாம் தமிழர்
சென்னை: தமிழ்நாடு நாளான இன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து, மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணியை நடத்தினர். விடாது மழை பெய்தும் நாம் தமிழர் கட்சியினர் கையில் கொடியுடன் உற்சாகமாக பங்கேற்றனர்.
திராவிட கட்சிகள் பாணியில் இந்தி எதிர்ப்பு எனும் ஆயுதத்தை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருந்த அறிக்கையில், பல மொழிவழி தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால், இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களும் அதனை ஏற்றுக் கொண்டாலும்கூட, தமிழ் மண் ஒருபோதும் தலை வணங்காது.
தமிழ்நாடு மீண்டும் போர்க்கோலம் பூண்டு இந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்க்கும்! தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! அந்த மொழிப்போர்க்களத்தில் முதன்மை படையாக நாம் தமிழர் கட்சி இருக்கும்! அதற்கான தொடக்கமாக வருகின்ற 'நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்' அன்று இந்தி திணிப்புக்கு எதிரான மாபெரும் கண்டனப் பேரணியை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவிருக்கிறது என கூறியிருந்தார்.

சீமான் அழைப்பு
நாம் தமிழர் கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், இப்பேரணியில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உங்களுடைய பாதுகாப்பும் முக்கியம் என்பதை உறவுகள் அனைவரும் உணர்ந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தி எதிர்ப்பு பேரணி
வரலாறு காணாத வகையில் நடைபெறவுள்ள மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் உணர்ச்சிப்பெருக்குடன் வருகை தரவிருக்கும் எனது பேரன்பிற்குரிய உறவுகளையும், அன்புத் தம்பி, தங்கைகளையும் நேரில் காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியிருந்தார்.

நாம் தமிழர் கட்சி
நெடுந்தொலைவிலிருந்து பல மணி நேரங்கள் வாகனங்களில் பயணித்து வரும் உறவுகள் எவ்வித அவசரமுமின்றி, நிதானமாக வாகனங்களில் பயணித்து வரவேண்டுமென சீமான் அறிவுறுத்தியுள்ளார். சீமானின் அழைப்பை ஏற்று ஏராளமானோர் கைகளில் கொடியுடன் உற்சாகமாக பேரணியில் பங்கேற்றனர்.

விடாத மழை குடையோடு பேரணி
சென்னையில் நேற்றிரவு முதலே பெருமழை பெய்து வருகிறது. காலையில் இருந்தும் மழை விட்டு பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. அடாது மழை பெய்தாலும் சீமான் தலைமையில் விடாது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு பேரணியில் ஏராளமானோர் கையில் குடையுடன் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications