ஒரே உத்தரவுதான்.. இதைத்தான் சீமான் அப்போதே சொன்னார்.. நாம் தமிழர் ஸ்டைலை பின்பற்றும் ஏ.பி, ம.பி அரசு
சென்னை: தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மேடைக்கு மேடை வாக்குறுதியாக கொடுத்து வரும் விஷயங்களை பிற மாநில முதல்வர்கள் சட்டங்களாக இயற்ற தொடங்கி உள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இன்னும் குறைந்தது ஒரு வருடத்திற்கு பொருளாதாரம் மீண்டு வராது, பல மில்லியன் பேர் வேலை இழக்க போகிறார்கள் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கியமாக தங்கள் சொந்த மண்ணிலேயே மக்கள் தங்கள் பார்க்கும் வேலையையே இழக்க தொடங்கி உள்ளனர். இப்படி உள்ள சூழ்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் பலர் தங்கள் வேலையை இழந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
வங்கி கடன்களுக்கான இஎம்ஐ செலுத்தும் அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க கோரிக்கை
வேலை இன்றி வருகிறார்கள்
முக்கியமாக அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் வேலையை இழந்து, விசா நீக்கப்பட்டு இந்தியா திரும்புகிறார்கள். உலகம் முழுக்க இருக்கும் நாடுகள், தங்கள் ஊர் மக்களுக்கு வேலை கொடுக்க தீவிரம் காட்டி வருகிறது. வெளிநாட்டு மக்களுக்கு வேலை கொடுக்கும் முன் எங்கள் பகுதியில் இருக்கும் மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று வெளிநாட்டு அரசுகள் சட்டங்களை கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது.
டிரம்ப் எப்படி
அதிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருபடி மேலே, தங்கள் நாட்டில் தற்போது எச் 1 பி விசாவையே ரத்து செய்து இருக்கிறார். அமெரிக்கர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். இதனால் புதிய வேலையில் சேரும் மக்களுக்கு விசா அளிக்க முடியாது என்று டிரம்ப் வெளிப்படையாக மறுத்து உள்ளார். அமெரிக்காவில் புதிய வேலையில் சேர விரும்பும் நபர்கள் டிசம்பர் இறுதிவரை விசா பெற முடியாது. அமெரிக்கா - அமெரிக்கர்களுக்கு என்ற கொள்கைக்கு டிரம்ப் முன்னுரிமை கொடுத்துள்ளார்.
ஆந்திர பிரதேசம் எப்படி
இதே போல ஒரு சட்டத்தைதான் ஆந்திர பிரதேசத்தில் அம்மாநில இளம் முதல்வர் ஜெகன் கொண்டு வந்தார். அதன்படி தனியார் நிறுவனங்களில் இருக்கும் 75 சதவிகித வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு (Job Reservation) ஒதுக்கும் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் இந்த சட்டத்தை அவர் கொண்டு வந்தார்.
செம
தங்கள் சொந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று இவர் இந்த சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார். அதன்படி அரசு, தனியார் தொழிற்சாலைகள், உற்பத்தி ஆலைகள் என்று அனைத்து நிறுவனங்களிலும் 75 சதவிகித மாநில வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், என்று சட்டம் கொண்டு வந்து இருக்கிறார்.
மத்திய பிரதேசம் எப்படி
இன்னொரு பக்கம் மத்திய பிரதேசத்தில் அரசுப் பணி அனைத்தும் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் மட்டுமே இனிமேல் அந்த மாநிலத்தில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். கொரோனா காரணமாக மாநில மக்கள் வேலை இழக்காமல் இருக்க அவர்கள் இந்த சட்டம் கொண்டு வந்துள்ளனர்.
கர்நாடகா எப்படி
அதேபோல் கர்நாடகாவும் , தங்கள் மாநிலத்தில் வேலை பார்க்க கன்னட மொழி அவசியம் என்று சட்டம் கொண்டு வர உள்ளது. கன்னடம் கற்று அதற்காக TOEFL போன்ற தேர்வுகளை மக்கள் எழுத வேண்டும் என்று சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். நவம்பர் மாதம் இதற்கான அறிவிப்பு வரும் என்று கூறுகிறார்கள். கன்னட மக்களுக்கு பணிகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த நடைமுறையை கொண்டு வர உள்ளனர்.
ஆனால் என்ன
ஆனால் தமிழகத்தில் இது அப்படியே தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தில் தமிழர்களின் வேலைவாய்ப்பு சரிய தொடங்கி உள்ளது. தமிழர்கள் பொருளாதார சரிவு காரணமாக வேலையை இழந்து வருகிறார்கள். ஆனால் , வடஇந்தியர்கள் தமிழகத்தில் இப்போதுதான் அதிக வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். தென்னக ரயில்வே முழுக்க வடஇந்தியர்கள்தான் இருக்கிறார்கள். திருச்சி ரயில்வே பணிகளை முழுக்க முழுக்க வடஇந்தியர்கள் லாக்டவுனுக்கு இடையிலும் ஆக்கிரமித்தது பெரிய விமர்சனத்தை பெற்றது.
மத்திய அரசு மட்டுமில்லை
மத்திய அரசு பணிகள் மட்டும் இன்றிய தனியார், தமிழக அரசு பணியிலும் வெளி மாநில ஊழியர்களே அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் சென்னையில் வடஇந்தியர்கள் பலர் வேலையில் இருக்க, தமிழர்கள் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கொரோனா காரணமாக தமிழர்கள் வேலையை இழந்து வரும் நிலையில் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசமே போல் நாமும் சட்டம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
என்ன முக்கியம்
இப்படிப்பட்ட சமயத்தில்தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை தமிழகத்தில் அவசியம் பெறுகிறது. தமிழகத்தில் தமிழர்களுக்கு பணிகளை கொடுக்க வேண்டியது அவசியம் என்று மேடைக்கு மேடை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார்.. தமிழக அரசு, தனியார், தமிழகத்தில் இருக்கும் மத்திய நிறுவனங்களில் தமிழர்களுக்கு பணிகளை கொடுக்க வேண்டியது அவசியம் என்று நாம் தமிழர் கட்சி பேசி வருகிறது. தற்போது இதன் தேவை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏன் முக்கியம்
சீமான் சொன்னது போலவே மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் எல்லாம் சட்டம் கொண்டு வருகிறது. தமிழகமும் இப்படி சட்டம் கொண்டு வருவதில் தவறு இருக்க வாய்ப்பு இல்லை. ஒரே உத்தரவின் மூலம் தங்கள் மாநில மக்களை அந்த ஊர் அரசுகள் காத்து இருக்கிறது. தமிழகமும் அதேபோல் சட்டம் கொண்டு வர வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. ஒரு pandemic சமயத்தில் தங்கள் சொந்த ஊர் மக்களின் வேலைவாய்ப்பை காப்பாற்றும் சட்டம், எந்த நாளிலும் இன, மொழிவெறியில் சேராது.
சீமான் கூறி வருகிறார்
சீமான் பல மேடைகளில், தமிழர்களுக்கு மட்டுமே வேலை என்ற கொள்கையை உணர்த்தி பேசி வருகிறார். தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனம் வேல்முருகனும் இதே கோரிக்கையை வைத்து வருகிறார். தற்போது மற்ற மாநில அரசுகள் விழித்துக் கொண்டு தங்கள் மாநில மக்களை காக்க சட்டம் கொண்டு வருகிறது. தமிழகமும் வந்தாரை வாழ வைத்தது மட்டும் இல்லாமல், இனி இருப்பவர்களையும் வாழ வைக்க சட்டம் கொண்டு வர வேண்டும்.